வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 14 December 2020

ஆனந்தன் எனும் அற்புதம்

  • ஆனந்தன் எனும் அற்புதம்
     
     
    தோழர் ஆனந்தன் மறைந்து இருபத்தியைந்து ஆண்டுகள்
    ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனித்துவ முத்திரை பதித்த தடம் மாறா இலக்கிய ஆளுமை மனித நேயம் என்பதற்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தவன் .
    மட்டக்களப்புக்கு நான் வந்த பின் எனக்கு அறிமுகமாகி ஒரு மூன்று வருடத்துக்குள் மூன்று யுகத்துக்கான நினைவுகளை என்னில் ஏற்படுத்திச் சென்ற தோழமை.
    எளிமை அன்பு நேர்மை இவற்றின் இலக்கணம் அவன்
    பொய்மையில்லா இலக்கியம் பேசுபவன் இலக்கியக் கூட்டங்களில் தயவு தாட்சண்யம் பார்க்காத விமர்சகன்.
    அவனது "கவிதை வாங்கல்லையோ கவிதை" என்ற அமர வரிகள் இன்று எவ்வளவு பொருந்தி நிற்கிறது அவன் நினைவாய்.
    மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் அடையாளமாய் உலா வந்த உயர் தனி இலக்கிய ஆளுமை.
    முற்போக்கு முகம் கொண்டவன் போலிகளைக் கண்டு பொங்கும் குணம் உடையான்.
    மலையாள இலக்கியத்தில் ஈடுபாடும் அந்த மொழித் திறனும் வாய்க்கப் பெற்றவன்
    அவன் நினைவுகளோடு நான்
    2019 ஆண்டு அவன் நினைவாய் எழுதிய பதிவு
    மறந்து போகுமா
    கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்
    ஆனந்தன் இறந்து 25 வருடங்களை எட்டி நிற்கிறது,ஆயினும் எல்லாம் நேற்றுப் போல் என் நினைவில் நீள்கிறது.அவன் எனக்கு அறிமுகமானது 1992 ல் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக வந்த பிறகுதான் ஒரு மூன்று வருடங்கள்தான் ஆனாலும் நிறைந்த நினைவுகளை என்னுள் விட்டுச் சென்றுள்ளான் .
    1992ல் என்னைக் கண்டதும் என்னிடம் முதல் சொன்ன விடயம் அபோது சாருமதி மட்டக்களப்பிலிருந்து வெளியிட்ட "வயல்" சஞ்சிகையில் நான் பேராசிரியர் வானமாமலை பற்றி எழுதிய கட்டுரையை சிலாகித்த விதமும் அதில் நான் இன்னும் என்ன சொல்லியிருக்கலாம் என்பது பற்றியுமான விமர்சனப் பார்வை என்னை அவனுள் நெருகமாக்கியது.நான் அறிந்த மிகச் சிறந்த வாசகன் மாக்சியத்தை நேசித்த உண்மைத் தோழன்.விருப்பு வெறுப்புகள் அற்ற விமர்சகன் .
    வாசகர் வட்டத்துக்காய் ஈழத்து நாட்டாரியல் பற்றி ஓருரை ஆற்றும் படி கேட்டு ஒரு நீண்ட உரையும் அதன் பின்னரான கலந்துரையாடலும் கிழக்கின் நாட்டார் மண் சார்ந்த மரபுகள் பற்றி அவனது அபிப்பிராயங்களும் அந்த இலக்கிய கலந்துரையாடலுக்கு மகுடம் சூட்டி நின்றன.
    நான் எங்கு உரையாற்றினாலும் என் ரசிகன் அவன் என் உரையை சிலாகித்து சிலாகித்து கதை சொல்வான்.ஆனந்தனைப் போல எனக்கு இன்னொரு ரசிகனும் இருந்தான் சிவராம் இருவரும் ஒரு சேர என் வீட்டு முன் மண்டபத்தில் இஞ்சி பிளேண்டியையும் குடித்துக் கொண்டு சுவாரஸ்யமான இலக்கிய அரசியல் உரையாடல்கள்.
    இஞ்சிப் பிளேண்டியென்றால் ஆனந்தனுக்கு உயிர் ஆனந்தன் வீட்டுக்கு எப்போ சென்றாலும் வத்சலா இஞ்சிப் பிளேண்டியோடு வந்து நிற்பா.மறந்து போகுமா இவையெல்லாம்.
    மகள் அனாமிகாவோடு செல்லம் பொழிவதில் அவன் என்றுமே குறை குறை வைக்கவில்லை பிள்ளைகள் என்றால் அவர்கள் மொழியில் சொக்கிப் போவான் .அனாமிகாவை சீண்டிப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இன்று அவனும் இல்லை அவன் நேசித்த என் மகளும் இல்லை ஆனந்தன் இறந்த போது அவள் துடித்துப் போனாள் கடந்து விட முடியாத நினைவுச் சுமை.
    ஆனந்தன் மட்டக்களப்பு கொண்டாட வேண்டிய கலை இலக்கிய ஆளுமை
    அவன் நினைவாய் எவ்வளவோ பேசலாம் பேசுவோம்.
    மளையாள இசை மலையாள இலக்கியத்தில் மிகுந்த பரிட்சயம் உள்ளவன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் ஆற்றலால் சில சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளான் .இன்னும் அவன் இருந்திருந்தால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளம் சேர்த்திருப்பான்.மலையாள இசையை எனக்கு அறிமுகப் படுத்தியவனும் அவனே அவனிடமிருந்து மலையாள இசைப் பேழைகளை வாங்கி கொடுக்காநல் விட்டு அவன் நினைவாய் என் மட்டக்களப்பு வீட்டில்.இன்றும் அவன் நினைவுகளுடன் மலையாள இசையை விரும்பிக் கேட்கும் ரசிகனாய் நான் .
    வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பான்
    "சுகு அந்த ஆதம் காக்கா பாடலைப் பாடு" என்பான் கேட்டுக் கேட்டு சலிக்காத பாடல் அது
    "ஆதம் காக்கா ஆதம் காக்கா
    அவரைக் கண்டா சொல்லிடுங்கோ
    பூவரசம் கன்னி ஒன்று
    பூ மலர்ந்து வாடுதெண்டு"
    மறந்து போகுமா அவன் நினைவு
     
     

     
    2018ஆம் ஆண்டு எழுதியது
    தோழர் ஆனந்தன்
    நான் மட்டக்களப்பு வந்த பின் பல்கலைக் கழகத்துக்கு வெளியே பல நண்பர்கள் அறிமுகமாயினர் அவர்களில் ஆனந்தனும் ஒருவர். ஆரம்ப அறிமுகத்திலேயே நானும் அவரும் பல விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பதை இனங் கண்டு கோண்டோம்.அதனால் அவருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாகியது.
    அவர்கள் இருந்த பார் வீதிக்கு பக்கத்திலேயே சில மாதங்கள் வாடகை வீடு அதனால் அவர் நடையாக வீட்டுக்கு வருவதும் நான் நடையாக அவர் வீட்டுக்கு செல்வதும் இலக்கியம் சினிமா கவிதை என உரையாடல்கள் நீள்வதுமாக பொழுது ஆரோக்கியத்தின் வழி பயணித்தது..
    ஆனந்தனின் மனைவி வத்சலாவும் என் மனைவி பிரமிளாவும் நெருக்கமான நண்பிகளாயினர் எ மகள் ஆனந்தனோடு ஒட்டிக் கொள்வாள் ஆனந்தன் அவளை மாலை நேரங்களில் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மாமாங்க குளக்கரைக்கு கொண்டு போய் அவளுக்கு புதினம் காட்டி வருவதுமாக ஆனந்தனின் அன்பில் கரைந்தாள் என் மகள் .
    ஆனந்தனின் வீடு மாமாங்க கோயில் போகும் சந்தியில் மூலையில் திருவிழா வந்து விட்டால் நண்பர்களால் நிறைந்து வழியும் கலகலப்பாய் அந்த நாட்களின் முன்னிரவுப் பொழுதுகள் உரையாடல்களும் பாட்டும் என களை கட்டி நிற்கும் மட்டக்களப்பு கொம்பு பாடல்களை அடிக்கடி என்னை பாடச் சொல்லி ரசிக்கும் என் ரசிகனாய் எப்போதும் .என் மேடைப் பேச்சை பாராட்டி மகிழும் தருணங்கள் .
    .
    கொஞ்ச நாட்களில் நாங்கள் பெய்லி குரோஸ் வீட்டை வாங்கி குடி புகுந்த பின் ஆனந்தனின் தொடர்பும் எந்த குறையும் இல்லாமல் நீடித்த அன்பாய் நட்பாய் நிலைத்தது .
    ஆனந்தன் எப்போதும் பிளேன்டீ தான் கேட்பார் வீட்டில் என்ன இருக்கோ கேட்டு சாப்பிடுவார்
    மலையாள இலக்கியத்தில் மிகுந்த ஈடு பாடு காட்டிய ஆனந்தன் மலையாள இலக்கியங்கள் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார் .மலையாள பாடல்கள் கேட்பது பிடிக்கும் நிறையவே மலையாளப் பாடல்கள் பதிந்த கெசற்றுக்கள் வைத்திருப்பார் அவர் மூலமாகவே மலையாள இசைக்கு நான் பரிச்சயமானேன்.
    மலையாள இலக்கியத்தின் செழுமையை அது பற்றிய அறிவை அகலிக்க ஆனந்தனுடனான உரையாடல்கள் எனக்கு துணை செய்தன .
    எங்கள் வீட்டு விறந்தையில் குப்புற அவரது வண்டி நசிய படுத்துக் கொண்டு மகளோடு விளையாடிய பொழுதுகள் இன்னும் மாறாத நினைவுகளாய் எப்போதும்
    மட்டக்களப்பு வாசகர் வட்டத்தினுடனான செயல் பாடுகளில் ஆனந்தன் காட்டிய ஆர்வமும் முன்னெடுப்பகளும் மட்டக்களப்ப்பின் நவீன இலக்கிய மரபில் புதிய வெளிச்சத்தை பாச்சியது என்றால் மிகையாகாது.
    முற்போக்கில் நம்பிக்கை கொண்ட ஆனந்தன் விமர்சனம் என வரும் போது தயவு தாட்சன்யம் பார்க்காமல் விமர்சிப்பார் இலக்கிய கூட்டங்களில் அவர் பேசும் அழகு தனி யாருக்கும் வாய்க்காத குரலும் அந்த நடையும்.
    ஆனந்தனின் நினைவுகளை எழுத எழுத இன்னமுமாய் அது நீளும் நெஞ்சம் மறக்க முடியா மட்டக்களப்பின் கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்
    1995 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அதிரடிப்படை முகாமுக்கருகில் துப்பாக்கி சூட்டில் சாகும் போதும் மற்றவர்க்காக தன்னுயிரை ஈந்த என் தோழன் அவன் நினைவு எப்போதும்

    நன்றி சுகுமார் தங்களுடன் கொண்ட புலமை நட்பையும் குடும்ப நட்டையும் நான் அறிவேன்.
    அநேகமான தடவைகள் நானும் அவருடன் வந்திருக்கிறேன்.
    உங்களுடன் உரையாற்றுவதற்கு அவருக்கு அலாதியான விருப்பம் இருந்தது.
    அவர் சொல்லுவார் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நல்ல ஆழமான நவீன இலக்கிய புரிதலுடைய பால. சுகுமார் வந்திருக்கிறார் இனி நமது மாணவர்கள் பயனடைவார்கள்.
    துரதிர்ஷ்டவசமாக தங்களின் சேவை வரமுடியாமல் போய்விட்டது.
    நானும் அவர் நினைவாக ஒரு பதிவைப் போட்டிருக்கின்றேன்
    அதில் உள்ள புகைப்படம் தங்கள் வீட்டில் எடுத்தது

 

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி