வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 2 July 2018

பல்கலை வித்தகர் சேனையூர் வில்லுப்பாட்டு வீரசிங்கம்

இன்றைய அரங்கம் பத்திரிகையில்
பல்கலை வித்தகர் சேனையூர் வில்லுப்பாட்டு வீரசிங்கம்
————————-————————————–
மந்திரம், வைத்தியத்திலும் தேர்ச்சி பெற்ற ஒரு பல்துறைக் கலைஞர்



செந்தமிழ் செழிக்கும் சேனையூர் கிராமத்தில் 1939ஆம் ஆண்டு களியப்பு, தங்கம்மா தம்பதியினரின் இளைய மகனாகப் பிறந்தவர். கற்பகம், விஜயசிங்கம், யோகாம்பிகை, பாலசிங்கம், கமலாம்பிகை, சிவலிங்கநாயகி ஆகியோர் இவரது உடன் பிறப்புகள்.
இளமையில் துடிப்பும் நடிப்பும் மிக்க சிறுவனாய் எதையும் கூர்ந்து அவதானித்து, அவற்றில் எதையாவது செய்ய வேணும் என்ற ஆர்வத்துடன் ஈடுபட்டு குழப்படிகாரன் என்ற பெயர் பெற்றவர். இவருடைய தகப்பனார் விஜயசிங்கம் காளியப்பு ஒரு புலமைப் பாரம்பரியத்தின் வாரிசு; வைத்தியம் மந்திரம் ஆகியவற்றில் கை தேர்ந்த நிபுணர்.
சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் (இன்றைய கட்டைபறிச்சான் விபுலாநந்த வித்தியாலயம்)ஐந்தாம் வகுப்பு வரை படித்து தன் பாடசாலை கல்வியை இடைநிறுத்தினாலும் தன் தகப்பனாரிடமும் அண்ணன் விஜயசிங்கத்திடம் மரபு வழிக் கல்வியை முறையாக கற்றவர். இதனால் மந்திரம் வைத்தியம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். தன் நாப்பத்தைந்தாவது வயதில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்.
வைத்தியத்தில், முறிவு வைத்தியத்தில் இவருக்கு சிறப்பு தேர்ச்சியுண்டு. தன் சுய முயற்சியினாலேயே எல்லாவற்றையும் கற்று அவற்றில் தேர்ந்த கலைஞனாய் முதன்மை பெற்று, தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மா கலைஞன் இவர்.
சேனையூர் கும்பவிழாவுக்கு பேர் போன ஊர். சேனையூர்க் கும்பத்தின் பிதாமகராய் கருதப்படும் தகப்பனார் காளியப்புவிடம் மந்திரக் கலையை சிறப்புற கற்ற இவர், ஏனைய பூசாரிகளிடமிருந்து வேறுபட்டு மந்திரத்தை உச்சரிப்பதில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கியவர் எனலாம். வாலிப நாட்களில் இவரது மந்திரத்துக்கு கட்டுப்படாத கும்ப ஆட்டக்காரர்களே இல்லை எனலாம். மறிப்பு, கட்டு என்பவற்றை சுக்கு நூறாக்கும் தந்திரம் தெரிந்த மந்திரமொழி இவரது.
மருத நகரில் புவனேஸ்வரி புவன கணபதி ஆலையங்களையும் கும்ப நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்தி, சமயப் பண்பாட்டு புரட்சிக்கு வித்திட்டவர் என்று சொன்னால் மிகையில்லை.
இவர் போல் கோடியில் ஒருவர்தான் பிறக்க முடியும்.
பூசாரி, மந்திரன், வைத்தியர், ஓடாவி, சிற்பி, புலவர், மேசன்,நடிகன், நாடக எழுத்தாளன், ஆடல் வல்லான், மிகச் சிறந்த பாடகர், நாடக எழுத்தாளர், ஒப்பனையாளர், வில்லுப்பாட்டுக் கலைஞர், நாதஸ்வர வித்துவான், சாத்துப்படி கலைஞர்,இசையமைப்பாளன் என
ஒரு மனிதன் இத்தனை அவதாரங்கள் எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலானது இவரது கலை வாழ்க்கை.
பாடசாலை நாட்களில் பாடி ஆசிரியர்களின் பாராட்டை பெற்று தன் இசையால் எல்லோரையு வசீகரிக்கும் ஆற்றல் பெற்றவர். இசை ஞானத்தை இயற்கையாகவே தன் பரம்பரை வழியாக பெற்றுக் கொண்ட இவர், திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் இசையாற்றலால் அறியப்பட்டவர். சௌந்தரராஜனின் குரலை ஒத்ததாய் அமைந்த இவரை ஈழத்து சௌந்தரராஜன் என அழைப்பதுண்டு. முருகன் மீது கொண்ட பக்தியால் “குகா” என்ற பெயர் இவரது பட்டப்பெயரானது. சங்கீதத்தை முறையாக படிக்காவிட்டாலும் கர்நாடக சங்கீத பாடல்களை கடல்மடை திறந்தாற்போல் பாடும் வல்லமை பெற்றவர்.
கட்டைபறிச்சான் கலைவாணி இசைக் கழகத்தின் பிரதான பாடகராக பல மேடைகளில் தன் இசையால் நிறைத்தவர். பாடல் எழுதி இசையமைத்து பாடும் திறன் பெற்றவரும் கூட.
வில்லுப் பாட்டு மன்னன் மாஸ்ரர் சிவலிங்கத்தை தன் மானசீக குருவாக கொண்டு கொட்டியாரத்தில் இக்கலையை அறிமுகப் படுத்தியவர் இவரே. இலங்கை வானொலியில் இவரது வில்லுப்பாட்டு எழுபதுகளில் ஒலிபரப்பாகி அகில இலங்கையும் அறிந்த ஒரு கலைஞராக கிராமிய சஞ்சிகை நிகழ்ச்சியில் வலம் வந்தவர். இவர் பாடிய முதல் வில்லுப் பாட்டு ‘எங்கேயடா கம்பா சிலம்பு‘ என்ற இலக்கியநயம் மிக்க ஆக்கமாகும். இது பண்டிதர்களது பாராட்டுப் பெற்றதாகும். திருகோணமலை மாவட்டத்தின் இவர் வில்லுப்பாட்டு ஒலிக்காத இடம் இல்லை எனலாம். பல இடங்களுக்கு நானும் பக்கப்பாட்டு கலைஞனாய் சென்றமையயை பெருமையாகக் கருதுகிறேன்.
கவியரங்குகளில் தன் கவிதைகளால் பார்வையாளர்களை கட்டிப் போடும் ஆற்றல் மிக்கவர். எடுத்தவுடன் கவி சொல்லும் திறன் இவரது சிறப்புகளில் ஒன்று.
பல நூற்றுக் கணக்கான நாடகங்களில் நடித்திருக்கிறார் முதன் முதல் இவர் எழுதி தயாரித்து நெறியாள்கை செய்த நாடகம்‘தபோ பலம்‘ என்பதாகும். என்னை பொது மேடையில் நாடகத்தில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. எல்லா வகையான பாத்திரங்களும் இவருக்கு கை வந்த கலை. நடிப்பில் சிவாஜியின் மறு உருவாக்கம் என்று கூடச் சொல்லலாம். சிவனாக, எமனாக, அரிச்சந்திரனாக, கர்ணனாக,வீரபாண்டிய கட்டப் பொம்மனாக, விவசாயியாக, புலவராக ஏற்ற பாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
தா.ஜெயவீரசிங்கம் ஆசிரியர் எழுதி தயாரித்து நெறிப்படுத்திய‘இவளும் ஒரு தாய்‘ கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அதில் கர்ணனாக தோன்றி சிவாஜியின் நடிப்புக்கு சவால் விட்டவர் என்று சொல்லலாம். அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார் அதில். பார்த்தோர் எல்லாம் கண்கலங்கி அழுத அந்த காட்சிகள் இப்போதும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
மூதூரில் வேதனாயகம் வைத்தியரால் தயாரிக்கப்பட‘தென்றலும் புயலும்‘ நாடகத்தில் விசித்திரமான நகைச்சுவை பாத்திரம் ஏற்று கலக்கியவர் என்று சொல்லலாம். இரண்டரை மணித்தியாலம் கொண்ட முழு நீள நாடகம். அதுவே பின்னர்‘தென்றலும் புயலும்‘ எனும் திரப்படமாகியது. இவரே திரைப்படத்திலும் நடிப்பதாக பேசப் பட்டது, ஆனால் திரைப்படமாகும் போது இவர் கழற்றி விடப்பட்டார்.
புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர் எந்த விடயத்தையும் மற்றவர்கள் பார்ப்பது போலப் பார்க்க மாட்டார். ஒரு மாறுபட்ட தர்க்க நியாயங்கள் உள்ளதாக, யாரும் எழிதில் நிராகரித்து சென்று விடாதபடி அவர் கருத்துக்கள் இருக்கும். மரபு வழிப்பட்ட கல்வியில் வந்திருந்தாலும் அந்த மரபையும் உடைத்துப் பார்க்கும் திறன் அவருக்கு இளமையிலேயே இருந்துள்ளது. பல விடயங்களில் தன் தகப்பனாருடனேயே கருத்துத் தர்க்கம் செய்து அவரது கோபத்துக்கு ஆளாகியதும் உண்டு.
சமூக அவலங்களையும் சமூக பிரச்சினைகளையும் தன் படைப்புகளில் வெளிக் கொணர்ந்தவர் அதோடு அகட விகடமாக பேசும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரம் இவர் பாடிய வெங்காயம் தேடி ஊரெல்லாம் போனேன் என்ற பாடல் கொட்டியாரப் பகுதியில் மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யமானது.
சமூக விழிப்புணர்வு மிக்க பல அரங்க நிகழ்வுகளை கடந்த பல ஆண்டுகளில் தயாரித்து அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் செய்து காட்டியவர்.
கும்மி, கோலாட்டம்,கரகாட்டம், காவடியாட்டம் என கிராமிய ஆடல் வடிவங்களை பழக்கி, பல போட்டிகளில் பரிசுகளை வென்றவர் என்பதும் இவருக்கான சிறப்புக்களாகும். சேனையூர் மத்திய கல்லூரியின் அறுபது வருச வரலாற்றில் இவர் ஒரு ஆசிரியர் போலவே, பாடசாலையோடு இணைந்து செயற்பட்டு, பாடசாலையின் கலை நிகழ்வுகளில் முக்கிய பங்காளனாய் இருந்தவர்.
Image may contain: 4 people
மாணவர்களுக்கான நடிப்புப் பயிற்சி, இசைப் பயிற்சி, ஆடல் பயிற்சி, ஒப்பனை என எல்லாவற்றிலும் தடம் பத்தித்தவர்.
Image may contain: 1 personபல்கலை வித்தகர் என்ற சொல்லுக்கு இவரே உதாரணம். மூதூர் பிரதேசத்தில் முதன் முதல் கலாபூசணம் பட்டம் பெற்று சேனையூருக்கு பெருமை சேர்த்தவர். அத்தோடு கிழக்கு மாகாண அரசு 2008 ஆம் ஆண்டு கலை இலக்கியத்துக்கான விருதை வழங்கி மதிப்பளித்தது. பல விருதுகளையும் பெற்று கலை வாழ்வுக்கு பெருமை சேர்த்தவர்.
தன் இருபத்தியேழாவது வயதில் கமலாதேவியை மணந்து கலைச் செல்வி, ரஜானந்தி, கார்த்திகா, காயஸ்திரி ஆகிய நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாகி அவர்களையும் தன் கலை வாரிசுகளாக உருவாக்கினார். பல கலை விழாக்களில் அவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையும் தன் அரங்கச் செயற்பாடுகளில் அவர்களையும் ஈடுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தன் வாழ்வை கலைப் பணிக்காக அர்பணித்த இந்த மா கலைஞன் தன் எழுபத்தொன்பதாவது வயதில் சேனையூரில் வாழ்ந்து வருகிறார். இத்தகைய கலைஞர்களுக்கு மாதாந்த உதவித் தொகை வழங்கி கௌரவிக்க வேண்டியது அரசின் கடமையாகும். வயது முதிர்ந்த சிங்கள கலைஞர்களுக்கு அரசு மாதாந்த உதவி வழங்கி அவர்கள் கலை வாழ்வுக்கு மதிப்பளிப்பது போல, இவர் போன்ற தமிழ் கலைஞர்களையும் கௌரவிக்க வேண்டும். கிழக்கு மாகாண கலாசார திணைக்களம் இதை கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும். வாழும் போதே கலைஞர்களை போற்றுவோம்
பாலசுகுமார்
சேனையூர்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார புலம்
கிழக்குப் பல்கலைக்கழகம்


No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி