வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

இங்கிலாந்தும் இலுப்பப் பாணியும்

இங்கிலாந்தும் இலுப்பப் பாணியும்

நான் இங்கிலாந்து வந்து பன்னிரண்டு வருடங்களை கடக்க போகிறது ஒரு மாமாங்கம் கழியப் போகிறது ஆனாலும் நான் இங்கிலாந்தில் வாழவில்லை என் ஊரில்தான் வாழ்கிறேன் .என் ஊர் தந்த நினைவுகளை எழுத எனக்கு இந்த வாழ் நாள் போதாது.

ஆனாலும் எனக்கு தோன்றுவதை எழுதிக் கொண்டே இருப்பேன் இங்குள்ள மாபெரும் இலக்கிய ஆளுமைகள் அதனை இலக்கியமாக ஏற்றுக் கொள்வார்களோ தெரியாது அவர்கள் இன்னமும் ஒரு வட்டம் போட்டு கோடு போட்டு படியல் தயாரித்து உலஜ இலக்கியதரம் பற்றியெல்லாம் பேசுவார்கள்.கலை அலை என்பார்கள் உலக இலக்கிய பரப்பு விரிந்தது ஆபிரிக்க லத்தீன் அமரிக்க ஆசியாவின் பல இலக்கியங்கள் இவர்கள் வரையறைக்குள் வருவதில்லை இன்னமும் மேற்கத்தைய மனோபாவத்துடனான நச்சரிப்பு பட்டியல் போடும் இலக்கிய மேட்டிமைத் தனம் சிலரை மாத்திரம் வழிபடும் புனிதம்


புனிதங்களை உடைத்து படைப்பதே நவீன இலக்கியம்
வரும் வைகாசி மாதம் முடிய இலுப்பை மரங்கள் பூத்துக் குலுங்க தொடங்கும் கோடையின் வெப்பம் இலுப்பை பூ மணத்தால் மனத்தை தணிக்கும் மருந்தாக எங்கள் சுவாசத்தில் கலக்கும். அதன் வாசம் விடிகாலைப் பொழுதில் காற்றையும் கிழித்துக் கொண்டு காத தூரத்துக்கு அள்ளிச் சொரியும் ஆனந்தக் களிப்பு அது.
காடுகள் எங்கள் வாழ்வின் எல்லாக் காலங்களுக்குமான பேசு பொருள் வருடம் தோறும் நாங்கள் அதன் வழி பயணித்து இயற்கையின் கொடைகளை பழமாகவும் பூவாகவும் காயாகவும் கனியாகவும் கொண்டாடும் சமூகம் நாம்.
ஓங்கி வளர்ந்த இலுப்பை மரங்களை அண்டி விடி சாமத்தில் வண்டில் கட்டிப் போய் படுத்திருந்து வெள்ளைச் சீலை விரித்து இலுப்பைப் பூச் சொரியும் அந்த நேரம் வரை தூங்கும் போது காது மடல் களில் வந்து விழுந்து எங்களை எழுப்பி சுற்றிப் பரவும் அந்த சுகந்த வாசத்தில் நாங்கள் மயங்கும் அந்தப் பொழுது சொர்க்க வாசலின் திறப்பு.
ஒரு பெரு மரத்துக்கு கீழ் பகுதி பகுதியாக பகுத்துப் பிரித்து மழையயை போல தூறலாய் பூக்கள் சொரியும் விடிந்தவுடன் தன் ஆடத்தை நிறுத்தி மீண்டும் மற்றொரு அதிகாலை ஆட்டத்துக்காய் காத்திருக்கும் எங்கள் இலுப்பை.
இலுப்பம் பூ அதன் சுவை அவித்து அதை வடித்தெடுத்து காய்ச்சி பாணியாக்கி சிறு முட்டியில் இட்டு வாயில் வெள்ளைச் சீலை கட்டி அதனை பல வருசங்களுக்கு பழுது படாமல் பாதுகாக்கலாம்.
தயிரும் சோறும் வாழப் பழமும் இலுப்பைப் பாணியும் எங்கள் உணவு எங்கும் கிடைக்காத சாப்பாட்டு அனுபவம் எங்களுக்கு.
நான் இங்கிலாந்து வந்ததும் என் வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் என்னோடு கூட வருபவன் நண்பன் ரத்தினசிங்கம் அங்கிருந்து என் மாமியார் வரும் போது என்ன கொடுத்து விட என்று கேட்டான் நான் சொன்னேன் இலுப்பைப் பாணி கொடுத்து விடு என்று இது நடந்தது 2009ஆம் ஆண்டு அவன் அனுப்பிய இலுப்பை பாணி இன்னமும் பழுது படாமல் என் இங்கிலாந்து வீட்டில் இரவும் இலுப்பை பாணியோடு தயிர் சாப்பிட்டேன் அவன் நினவோடும் ஊர் நினைவோடும்.
ஒன்பது வருடங்கள் இன்னமும் அதன் சுவை மாறாமல் அப்படியே அதே சுவையில்
நானும்தான் பன்னிரண்டு வருடங்கள் புலம் பெயர் வாழ்வில் கடந்து சென்றாலும் அதே சுவையுடநும் அதே ஊர் மணத்துடனும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி