வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 4 March 2018

விளக்கீடு

விளக்கீடு

ஈழத் தமிழர்கள் கார்த்திகை தீபம் என அழைக்காமல் காலம் காலமாக விளக்கீடு எனவே அழைத்து வருகின்றனர்.
வீடுகளிலும் கோயில்களிலும் விளக்கேற்றலும் பந்தங்களின் ஒளியுமாய் இன்னாள் ஒளித் திரு நாள்
என் நினைவுகளில் உள்ள விளக்கீடு
பந்தம் சுற்றுவதற்காக முதல் நாளே காட்டுக்கு செல்வோம் பந்தக் கம்பு வெட்டுவதற்காக.இரு கவர்,மூன்று கவர்,பன்மைக் கவர் தனிக் கம்பு என பல வடிவங்களில் வெட்டி எடுப்போம்.உலுமந்தை,பன்னை ஆகிய மரங்களே பந்தக் கம்புக்கு ஏற்றது.அவற்றை வெட்டி கட்டி சுமந்து வீட்டுக்கு கொணர்ந்து அவற்றின் தோலை அழகாக சீவி அடுக்கும் போது அவை வெண்மையும் மஞ்சளும் கலந்த அழகு தரும்.

வெளுத்து வைத்த பழைய வேட்டி துணி பந்தச் சீலையாகும்.அப்புச்சி பொறுமையாக இருந்து பந்தச் சீலை சுற்றி ஒரு பாத்திரத்தில் இருக்கும் எண்ணையில் ஊற வைப்பார்.
மாலையானதும் வீட்டிற்குள் விளக்கேற்ற அம்மா விளக்கடிக்கு உத்தியாக்களுக்காக படையல் செய்வார் இங்கு உத்தியாக்கள் என்பது இறந்த நம் முன்னோர்.

வளவு முழுவதும் பந்தம் கொழுத்தி மகிழ்வோம் கிணற்றுத் துலாவில் பல்கவர் பந்தம் கட்டப் பட்டு ஒளி ஏற்றப் பட விண்ணில் ஒளி பாயும்.
வாசலில் வாழை குற்றி நடப் பட்டு அதில் தேங்காய் பாதியில் சீலை வைத்து நெய்யிட்டு விளக்கிடப் படும் ஊரே ஒளியில் மகிழும்.
ஊரவர் ஒவ்வொருவரும் கோயிலிலும் தங்கள் சார்பில் பந்தங்கள் மூலம் ஒளியேற்றுவர்.

கார்த்திகை விளக்கீடு பற்றி பல்வேறு புராணக் கதைகள் கூறப் பட்டாலும் சங்க இலக்கியம் தமிழ் மரபில் கார்த்திகை விளக்கீடு பற்றிய செய்திகளை தருகிறது
"சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபத்தைப் போல சாயல் கொண்ட நிகழ்வுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
சங்க இலக்கியத்தின் அகத்துறைப் பாடல்களில் நற்றிணை சிறப்பான ஒரு தொகுப்பு. அதில் வரும் 58வது பாடலை முதுகூற்றனார் என்பவர் எழுதியுள்ளார் அப்பாடலில் தீபத்தைப் பற்றினக் குறிப்பு உள்ளது. அதில்

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக்
கோல்கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுதோடு மெய்சேர்த்து,
அவல நெஞ்சினம் பெயரஇ உயர்திரை
நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன்
ஓடுதேர் நுண்நுகம் நுழைந்த மாவே..

இப்பாடலை சிலர் முல்லை நிலத்துக்கு உரியன எனச் சொன்னாலும் இதில் துலங்கும் காட்சி நெய்தல் நிலத்துக்கு உரியது. கடலுக்குச் சென்றத் தலைவனுக்கு காத்திருக்கும் தலைவி வருத்தடைகிறாள். பரந்த கடலில் சென்றத் தலைவன் பெரியவர்கள் தோளில் மாட்டிய சிறு பறையை அடிப்பதுபோல விரைவாய் துடுப்பிட்டு அலைந்துக் கொண்டிருக்கிறான்.. அப்போது, வீரை என்ற இடத்திலிருந்து ஆட்சி புரியும் சோழநாட்டு வேளிர் குடியைச் சேர்ந்த வெளியன் தித்தன் ஆட்சி நடக்கிறது. பனிக்காலத்தின் குளிர்ந்த மாலை வருகிறது, பனி பெய்கிறது, அப்போது சங்கு ஊத, முரசில் பெரிய விளக்கேற்றி வைக்கிறான் தித்தன். தலைவின் அவலம் மனத்தில் கூடுகிறது. அது எப்படி இருக்கிறதென்றால் ஒன்றன் பின் ஒன்றாக ஓடும் தேரினைப் போல கடலில் எழும் பெரிய அலைகள் நெடு நீரில் கலப்பது போல கலங்குகிறாள். என்று புலவர் விளக்குகிறார்.

இக்கவிதை காட்டும் காட்சிபடி, முரசில் விளக்கினை ஏற்றினான், என்பதைத்தான் கார்த்திகை தீபத்திற்கான ஆதாராமாகக் காட்டுகிறார்கள். கவிதையில் வரும் காட்சிபடி பெரிய முரசில் விளக்கை ஏற்றினான் என்றால் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஏற்றினான் என்று பொருள் கொள்ள முடியும், இன்னும் ஒரு விளக்கம் இக்கவிதைக்குத் தரப்படுகிறது, அதன்படி உப்புத் தொழில் செய்பவர்கள் தித்தன் ஏற்றிய விளக்கின் ஒளியில் உப்பள வேலை செய்தன்ர் என்கிறது. ஒரு வேளை அது கலங்கரை விளக்கமாகக்கூட இருக்கலாம். அதில் குறிப்பிடப்படும் வீரை என்ற ஊர் எங்கிருக்கிருக்கிறது எனத் தெரியவில்லை. சிலர் சேலத்திற்கு பக்கத்தில் உள்ள வீரகனூர் என்று சொல்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டால் காட்சியே மாறிவிடுகிறது. அதாவது முல்லை நிலத்திற்கு உரிய காட்சியாக மாறிவிடுகிறது. அப்படி மாறினால் விளக்கமும் மாறிவிடும் போருக்குச் சென்ற தலைவனுக்காக தலைவி வருந்துகிறாள். மாலையில் விளக்கை அரசன் ஏற்றியும் அவன் திரும்பவில்லை… என பொருள் கொள்ளலாம், எது எப்படியாயினும் பெரிய முரசில் அதாவது கொப்பரையில் விளக்கை ஏற்றினான் என்பது விளங்குகிறது.


இதற்கும் கார்த்திகை தீபத்திற்கும் என்னத் தொடர்பு என்று சந்தேகம் வரலாம். இது பனிக் காலத்தில் மன்னன் விளக்கேற்றினான் என்பதால் அது கார்த்திகையாய் இருக்கலாம் என்பது ஒரு யூகம்தான். அதாவது அதை ஒரு சான்றாக வைத்துக் கொள்ளலாம்.. "
விளக்கீடு நம் மரபாய்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி