வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

கிளிவெட்டி கிராமசபைத் தலைவர் பூபாலபிள்ளை வினாயக மூர்த்தி

    நம்மவர்களை நாம் அறிவோம்
    சேவையும் சிறப்பும்
    கிளிவெட்டி சேர்மன்
    கிளிவெட்டி கிராமசபைத் தலைவர்
    பூபாலபிள்ளை வினாயக மூர்த்தி
    எனக்கு பதினைந்து வயதில் அறிமுகமான நான் அறிந்த கிராமத்து அரசியல் தலைவன் கொட்டியாரத்தின் பூர்வீக தமிழ் கிராமமான கிளிவெட்டி கிராமசபையில் நீண்ட நாட்கள் பதவி வகித்த கிராமத்து அரசியல் புயல்.
    1970 மூதூர் வரலாற்றில் அமரர் ஏகாம்பரத்துக்கு பின் ஒரு தமிழர் பாராளுமன்ற் உறுப்பினராக வருவதற்கான சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்த வியூகங்கள் வகுத்த இராஜதந்திரியாய் செயற்பட்ட அரசியல் ஆளுமை கொட்டியாரத்தின் கொடியை உயர்த்திய பெருமைகளில் ஒருவர்.
    1974ஆம் ஆண்டு ஈரோஸ் இயக்கம் தன் ஆரம்ப கால நடவடிக்கைகளை மூதூர் கிராமங்கள் தோறும் விரிவு படுத்திய போது சேர்மன் மகன் தவராஜா எங்களோடு இணைந்து செயல் பட்ட போது அவர்கள் வீடு எங்களுக்கு தங்கு மடமாகவும் உணவளித்து ஊக்குவிக்கும் இடமாகவும் இருந்தது அப்போது தங்கத்துரை அண்ணன் எம்பியாக இருந்தார் அவர் மாமனார் இவர். பல இரவுகள் அவருடனான அரசியல் தர்க்கங்கங்கள் ஈழப் போராட்டத்தின் அவசியம் பற்றி பேசிய அந்த நாட்கள் அவர் நினைவுடன் சங்கமித்து நிற்கிறது.
    கிளிவெட்டி ஒரு எல்லைக் கிராமம் பல தடவைகள் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சந்தர்பம் ஏற்பட்ட பொழுதெல்லாம் ஓர்மத்துடன் கிராமத்துக்கு அதன் பாதுகாப்ப்புக்கு உறுதுணையாய் நின்ற கிராமத்துக் காவலன் என்றும் சொல்லலாம் குறிப்பாக 1958கலவரம் இதில் கிராமத்தை பாதுகாக்க முன்னிண்ற இளைஞராய் அறியப் பட்டவர்.கிளிவெட்டியின் பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் வாரிசு யாருக்கும் பயப்படாத நெஞ்சுரம் மிக்கவர்.
    1981 மாவட்ட சபை தேர்தலில் அவருடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்த போது தேர்தல் அரசியலில் அவருக்கு இருந்த அனுபவம் வெளிப் பட்டது.ஒரு நாவல் எழுதக் கூடிய அனுபவங்கள் அவருக்கும் எனக்குமானது.
    அந்த நாட்களில் நடை பெறும் அரசியல் சமூக கலாசார நிகழ்வுகளில் வினாயகமூர்த்தி சேர்மனின் பங்களிப்பு இருக்கும் தோற்றத்தில் ஒரு கண்ணியத்தின் தரிசனம் அவரிடம் வெளிப்படும்.யாருக்கும் எதற்கும் மண்டியிடாத மாண்பை தன் வாழ் நாள் இறுதி வரை கடைப்பிடித்தவர்.
    மூதூரில் தினகரன் தமிழ் விழா 1965 நடை பெற்ற போது அந்த விழாவுக்கு சேர்மனின் பங்களிப்பு பற்றி வ.அ அவர்கள் தன் இலக்கிய நினைவுகள் நூலில் குறுப்பிட்டுள்ளார் என்னோடு வ.அ கதைக்கும் போது சேர்மனின் திறனை பல தடவை வியந்து சொல்லியிருக்கிறார் வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வரும் ஆளுமை என.
    கிளிவெட்டி கிராமம் அதன் வளர்ச்சியில் சேர்மன் வினாயகமூர்த்தி அவர்களின் பங்களிப்பு மறக்க முடியாதது.அதனை ஒரு சிறு நகரத்துக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த சமூக சேவையாளர் தன் பிரதேசத்துக்குள்ளேயே அடங்கிப் போன அரசியல் ஆளுமை.
    22வருடங்கள் கிளிவெட்டி கிராமசபைத் தலைவராய் இருந்து சாதனை படைத்தவர் தன் கிராமத்தை மாத்திரமல்ல அயல் கிராமங்களின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தியவர்.அன்று கிராமசபைத் தலைவர்களுக்குரிய செல்வாக்கை வைத்துல் கொண்டு பாடசாலைகள் சன சமூக நிலையங்கள் கிராம முன்னேற்ற சங்கங்கள் என அவர் பணி விரிவு பட்டிருந்தது.
    பெளத்த மேலாதிக்க அடையாளமாய் ஆக்கிரமிப்பு செய்யப் பட காரணமாகிரும் என கிளிவெட்டி கிராமத்தில் நின்ற பெரு விருட்சமான அரச மரம் தறித்த வழக்கில் சிறை சென்று மீண்டவர்.
    வரலாறும் பண்பாடும் பூர்விகமுமான கிளிவெட்டி எனும் கிராமத்தின் அடையாளங்களுள் ஒருவர் வினாயகமூர்த்தி சேர்மன் அவர்கள்
    முற்போக்கு எண்ணங்கள் நிறயவே இருந்தன அவரிடம் தன் கிராமம் தாண்டி கொட்டியாரத்தின் அரசியல் பரிமாணத்தில் அக்கறை செல்லுத்திய ஆளுமை.
    இன்று அவர் இல்லையாயினும் கிளிவெட்டியின் வரலாற்றில் அவர் தடங்கள் தொடர்கின்றன.1922ஆம் ஆண்டு பிறந்த சேர்மன் வினாயகமூர்த்தி அவர்கள் 1992ஆம் ஆண்டு தன் ஏழுபதாவது வயதில் காலமானார்கள் .
    அவரது கண்ணாடிக்குள் ஊறியிருந்த அரசியல் கனவுகளை நான் அறிவேன் அந்த அரசியல் அனுபவம் மிக்க ஆளுமையின் மாறா நினைவுகளுடன்
    பால.சுகுமார்
    மேனாள் புல முதன்மையர்
    கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி