வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

எல்லைகள் தாண்டிய எதிர் குரல்

தோழர் பற்குணம் சில நினைவுகள்
எல்லைகள் தாண்டிய எதிர் குரல்

தோழர் பற்குணம் இருபத்தியைந்து ஆண்டு நினைவு நாள் இன்று.
என் வாழ்வில் மறக்க முடியா நினைவுகளுக்கு சொந்தக்காரர் அவர் .அவருடனான பழக்கம் எனக்கு வெறும் ஐந்து ஆண்டுகள்தான் ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் நீடித்த நட்பு போன்ற வாழ்வனுபவத்தை எனக்கும் என் குடும்பத்துக்கும் தந்து விட்டு மறைந்த மா தோழமை .
பல்கலைக் கழக விரிவுரையாளராக பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து உதவி அரசாங்க அதிபர் முதல் மாகாண அமைச்சு செயலாளர் என பல அரச உயர் பதவிகளை வகித்தாலும் சிலருக்கு பதவிகளால் சிறப்பு ஆனால் தோழர் பற்குணத்தால் அந்த பதவிகள் சிறப்பு பெற்றன.
தோழர் பற்குணம் மானுட நேயம் மிக்க மாக்சிய சோசலிச கொள்கையாளன் எந்த பதவியில் இருந்தாலும் அந்த பதவியால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் தீவிர அக்கறையுடன் செயல் படும் செயல் திறன் மிக்கவர் .சுற்று நிருபங்களுக்குள் சுருங்கிப் போகாத மக்கள் சேவையாளன்.
தோழர் பற்குணம் ஒரு கலை இலக்கியவாதியும் கூட மாக்சிய ரசனை மக்கள் இலக்கியம் என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர் பாரதி மீது காதல் கொண்டவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எனும் கவிஞன் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர் பட்டுக் கோட்டை பற்றிய அவரது நூல் கலை இலக்கிய விமர்சகர்களால் விதந்துரைக்கப் பட்டது.
திருகோணமலையில் அவரது ஒழுங்கமைப்பில் நடை பெற்ற நாடகப் பட்டறைகள் திருமலையில் நவீன தமிழ் அரங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியமை இங்கு விதந்துரைக்கத் தக்கது.
பல நாடகங்களை எழுதியும் இயக்கியும் தன்னை ஒரு கலை இலக்கிய ஆளுமையாய் அடையாளப் படுத்தி பல முன்னுதாரணங்களுக்கு சொந்தக்காரர்.
Image may contain: 1 person, glasses நாடக அரங்கியல் அதன் வரலாறு பற்றி ஒரு முழுமையான நூல் வரவேண்டும் என விரும்பியவர் தன் ஆதங்கத்தை என்னிடம் வெளிப்படுத்தியவர் அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே எனது "உலக நாடக அரங்கு" எனும் நூல் ஆனால் அவர் மறைவின் பின்பே அந்த நூல் 1997ல் அவருக்கு காணிக்கையாய் வெளியிட்டேன் இதுவரை பல பதிப்புகளை கண்டுள்ளது ஆனாலும் இன்னமும் அதன் தேவையை என் மாணவர்கள் பலர் புதிய பதிப்பு ஒன்று கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.அவர் நினைவுக்கு சமர்ப்பணமான அந்த நூல் திருத்திய பதிப்பாய் இந்த ஆண்டு வெளிவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
இருபத்தியைந்து வருடங்கள் கடந்தும் எல்லாம் நேற்றுப் போல் உள்ளது.அவர் இல்லாமையின் வெறுமையை எப்போதும் உணர்கிறேன் .
என் இனிய தோழனே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி