வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

உலக புத்தக நாள் புத்தகங்களை காதலிப்போம்

உலக புத்தக நாள்
புத்தகங்களை காதலிப்போம்
நவீன தொழில் நுட்ப யுகத்தில் நாம் வாழ்ந்தாலும் புத்தகப் பண்பாடு உயிர்ப்புடையதாய் இன்று வரை கொண்டாடப் படுகிறது.
புத்தகத்தை கைகளால் அழைந்து முகர்ந்து அனுபவித்தல் என்பது ஒரு சுகானுபவம் வார்த்தைகளில் நாம் வடித்திட முடியாத வாழ்வனுபவம் அது.
தமிழில் 1554ஆம் ஆண்டு முதல் புத்தகம் வெளி வந்ததாக வரலாறு சொல்கிறது .
பாலபோதினியிலிருந்து இன்று பண்டைத் தமிழ் இலக்கியம் வரை என் கண்களுக்குள் நுழைந்து நுண் புலம் கண்டவை பல்லாயிரம் புத்தகங்கள்.
அந்த நாட்களில் பால போதினிப் புத்தகம் புதிதாய் வாங்கும் போது அந்த மணம் இன்னும் என் பக்கத்தில் இருப்பதாய் உணர்கிறேந் நான்.
அம்புலி மாமா எனத் தொடங்கியதும் பின்னர் ராணி விகடன் கல்கி குமுதம் என விரிந்ததும்
நான் கண்ட பெரிய புத்தகம் பாரதக் கட்டு பெரிய எழுத்து பாரதக் கட்டு அது எங்கள் ஊரில் சிலரிடம் மட்டுமே இருந்தது நிலாக் காலங்களில் முற்றத்தில் பாய் விரித்து குப்பி லாம்பு வெளிச்சத்தில் படிக்க எல்லோரும் குழுமியிருந்து கேட்பது ஒரு புத்தகப் பண்பாடாய் எங்கள் சேனையூரில் தொடர்ந்தது.
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலை அவற்றை படித்து முடித்த நாட்கள் அம்மம்மா ஐயா அம்மா என சொந்தங்கள் குழுமி இருக்க நான் சின்ன மாமா நாகேஸ்வரன் இருவரும் மாறி மாறி படிக்க பல நாள் நீண்ட பாரதக் கதை.யுத்த காண்டமே எனக்கு பிடித்த பகுதியாய் இருந்தது கர்ண பர்வமே என்னைக் கவர்ந்த பகுதி.
பின்னாளில் நாவல் சிறுகதை என தொடர அடுத்து திராவிட மாக்சிய நூல்கள் என வாசிப்பின் நீட்சி என்னுள்
எங்கள் கிராம சபை நூலகமும் சேனையூர் சனசமூக நிலையமும் என் வாசிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் வலுப் படுத்தி நின்றது.
Image may contain: 2 people, people sitting and indoor என் அம்மா ஒரு பெரும் வாசகி பேசும் படம் அகிலன் ,சாண்டில்யன்,ஜெகசிற்பியன் ,கல்கி ஜெயகாந்தன் என் எல்லா எழுத்துக்களிலும் மயங்கி கிடப்பா இப்போதும் வாசிப்பின் நேசிப்பில்
அவர் மூலமே தமிழின் அன்றைய நாவலாசிரியர்களை அறிந்து கொண்டேன்.
கணேஸ் மாமா,கனகசிங்கம் மாமா,கோணாமலை அண்ணன்,இரண்டு ஜீவரத்தினங்களும் எங்கள் புத்தக வங்கிகள்.
பின்னய நாட்களில் வ.அ.வின் திரிகூட நூலகம்
இப்போது என் வீட்டு நூலகமே துணையாய்
சேனையூரில் இயங்கும் அனாமிகா நூலகம்
புதிதாய் விரைவில் எல்லா வசதிகளுடனான பல ஆயிரம் புத்தகங்களுடன் அனாமிக்கா பண்பாட்டு மையம் சேனையூரில் இயங்கத் தொடங்கும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி