வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 11 June 2020

சோமசுந்தரத் தேசிகர் வீரமுனை குருமண்வெளி வழி வந்த முத்தமிழ் வல்ல முதுபெரும் புலவோன்

சோமசுந்தரத் தேசிகர்
வீரமுனை குருமண்வெளி வழி வந்த
முத்தமிழ் வல்ல முதுபெரும் புலவோன்
விபுலாநந்தர் காலத்தில் வாழ்ந்த சமகாலத்து தமிழ் சான்றோன் இவர்.
1885ஆம் ஆண்டு ஆடி 26ல்( 11.08.1885) சம்மாந்துறைக்கு அண்மையில் உள்ள பழந்தமிழ்ப் பெருமை கொண்ட வீரமுனையில் பிறந்து குருமண்வெளியில் வாழ்ந்து தமிழ் ஒளி பரப்பிய முத்தமிழ் வல்லான் .
ஒரு கிறிஸ்தவ மத போதகராக இருந்த போதும் சமய சமரச நோக்கிலேயே அவரது அறிவார்ந்த செயல்பாடுகள் இருந்தன.மட்டக்களப்பின் தனித்துவமான சமய நம்பிக்கைகளை நன்கறிந்த இவர் தன் வாழ்வை ஒரு இந்து மத துறவி போலவே அமைத்துக் கொண்டமையும்.தமிழ் சைவ புராண இதிகாசங்களில் ஈடுபாடு கொண்டும் அதன் வழி பல நூல்களை இயற்றியும் தான் வாழும் சமூகத்துக்கு ஏற்ற வகையில் தமிழ்ப் பணியாற்றியமையாலும் சோமசுந்தரத் தேசிகர் எனும் பட்டத்துக்குரியவராய் பன்மொழிப் புலவராய் அறியப் பட்டார்.சோமசுந்தர உபதேசியார் சோமசுந்தரத் தேசிகர் என தான் வாழ்ந்த குருமண்வெளியூருக்கு பெருமை சேர்த்த பெரு மகன் இவர்.பொது நலப் பணியும் தமிழ்ப் பணியும் கிறிஸ்தவ நற்பணியும் ஒருங்கு சேரப் பெற்ற பன்மைத்துவ ஆளுமையாளனாக இவரை நாம் பார்த்தாலும் தமிழ்ப் புலவர் எனும் அடையாளம் ஈழத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பெரும் புலவர்கள் வரிசையில் இவரைக் கொண்டாட முடியும்.
வீரமுனைக் கோவில் பூசகராகவும் தமிழ் இலக்கண இலக்கிய வல்லோனாக இருந்த சோமசுந்தரக் குருக்களிடம் இராப் பாடமாக இளமைக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூட மரபில் கற்று நிகண்டு,நைடதம்,மகாபாரதம் என புராண இதிகாசங்களில் புலமை பெற்றார்.பின்னர் பயிற்றப் பட்ட தமிழாசிரியராக தேர்ச்சி பெற்று தமிழ் ஆசிரியராக ஆறு ஆண்டுகள் நல்லாசிரியராக கடமையாற்றிய பின் சமய சமுக பொது நலத் தொண்டில் ஆர்வமுற்று மெதடிஸ்த கிறிஸ்தவ மத போதகராக மட்டக்களப்பின் பல கிராமங்கள் தோறும் தன் பணியை தமிழுக்கும் சமயத்துக்குமாக அர்ப்பணித்து மட்டக்களப்பின் கிராம பண்பாட்டையும் வழமைகளையும் அறிந்து அந்த கலாசார பண்பாட்டு ஊற்றில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
ஆசிரிய பயிற்சியின் போது அப்பாப் பிள்ளை போதகரிடம் சிவஞான சித்தியார் ,கந்த புராணம் என்பவற்றையும்,அக்காலத்தில் சிறந்த தமிழ் அறிஞராய் விளங்கிய யாழ்ப்பாணத்து முருகேச போதகரிடம் சைவ வேதாகமங்களையும் ,கிறிஸ்தவ வேத சாத்திரங்களையும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் கற்றுக் கொண்டார் இதனால் சைவ கிறிஸ்தவ மதங்களை நன்கறிந்த ஒரு சமய சமரச ஞானியாய் விளங்கிய இவர் பொது மக்களிடம் பெரு மதிப்புக்குரியவரானார்.இவரது சமரச நோக்கு மதங்கள் கடந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றமை இங்கு குறிப்பிடத் தக்கது.மத போதனைகளில் மற்ற மதங்களை எந்த வகையிலும் கண்டிக்காமல் தன் உபதேசங்களை ஒரு ஞானியைப் போல பிரசங்கித்ததால் மதங்களைக் கடந்து இவர் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்கள் கலந்து இவர் தமிழையும் இலக்கிய நயத்தையும் சுவைத்தமை பற்றி பலரும் குறிப்பிட்டிருப்பது பெரும் கவனிப்புக்குரியது.
தமிழ் செய்யுள் இயற்றும் மரபு மாற பெரும் கவி வல்லோனாய் இருந்திருக்கிறார் .இயற்கையாக கவிதை கை வரப் பெற்ற இவரை "முத்தமிழ் வல்ல முது பெரும் புலவர்" என பண்டிதர் வி.சி.கந்தையா அடை மொழியிட்டு பெருமைப் படுத்தியுள்ளார்.
"தேவ தோத்திர சங்கிரகம் "
எனும் இசைப் பாடல் நூல் இவரது பாரம்பரிய தமிழ் அறிவையும் இசை ஞானத்தையும் பக்தி உணர்வையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
"மனோன்மணி"
"கிருபாம்பாள்"
ஆகிய இரண்டு நாடக கூத்து நூல்கள் இவரது நாடக பாரம்பரிய கூத்து ஆளுமையை வெளிபடுத்துகின்றமையும் மட்டக்களப்பில் கிராமங்கள் தோறும் ஆடப்படும் கூத்து மரபில் இவர் இயற்றிய பல கூத்து உருவாக்கங்கள் மட்டக்களப்பின் கூத்து இலக்கிய மரபுக்கு வளம் சேர்த்து சிறப்பிக்கிறது எனலாம்.இதனால் சோமசுந்தரத் தேசிகர் ஊர்கள் தோறும் அறியப் பட்ட கூத்துக் கட்டும் ஆசானாய் பேர் பெற்றமையும் அவரை ஒரு பெரும் கலைஞனாய் அடையாளப் படுத்தியது.
இவர் இயற்றிய கூத்துகள்
1.பக்த குசேலா நாடகம்
2.சந்தனு நாடகம்
3.சராசந்தன் நாடகம்
4.புலேந்திரன் தூது நாடகம்
5.கம்சன் வத நாடகம்
6.மனோன்மணி
7.கிருபாம்பாள்
என்பன இன்றும் குருமண்வெளி வீரமுனை மற்றும் சூழவுள்ள பல கிராமங்களில் வாழும் முதியவர்களால் நினைவு கூரப் படும் கூத்து நினைவுகளாய் சோமசுந்தரத் தேசிகர் அறியப் படுகிறார்.
இக் கூத்துக்களில் அமைந்துள்ள விருத்தம்,கலித்துறை ,வெண்பா,அகவல்,சிந்து,கொச்சகத் தரு,திருப்புகழ்,வண்ணத் தரு என்பனவெல்லாம் தேசிகரின் இசை ஞானத்தையும் இலக்கண இலக்கிய புலமையையும் பறை சாற்றி நிற்கின்றன.
தேசிகர் இயற்றிய சிவராத்திரி அம்மானை எனும் நூல் பற்றி பண்டிதர் வி.சி.கந்தையா இப்படிக் குறிப்பிடுவார்.
"புராண வகையைச் சேர்ந்ததும் அண்மையில் அச்சேற்றி வெளியிடப் பட்டதுமான
" சிவராத்திரி அம்மானை"
எனும் நூல் இவரது புலமைப் புகழை மேலும் உயர்த்துவதாயிற்று.அம்மானே என்பது வரிப் பாடல் வகையை சார்ந்த செய்யுள் நூல் கல்வி அறிவு குறைந்த பொது மக்களும் இலகுவாக கற்றுப் பயன் கொள்ளும் வகையில் பெரிய தத்துவப் பொருள்களே இந்நூல் வடிவில் ஆக்கியளித்த தேசிகரது சிறப்பு இதனால் மேலும் கொண்டாடப் படுவதாயிற்று.இந்நூல் முகவிரையினைப் படிப்போர்
"வானகத் தெழும் வான் கதிரோன் புடை
மீனிமைப்ப விரும்பியமை போலும்
எனது துணிவு எனக்கே நகை விளைவிக்கிறது " என்பது முதலாக இவர் கூறும் அவையடக்க மொழிகளிலிருந்து அன்னாரது "பணியுமாம் என்றும் பெருமை"
எனும் பெரும் சிறப்பினைக் காணலாம்.
"முன்னமொரு கற்பமைதில் முழு உலகும்
மாயை தனில் ஒடுங்க எந்தை
துன்னிய நல் சுடலை தனில் சுயம்பு எனச்
சூலமொடு தோன்றும் காலை
மன்னு சிவன் மாசினியை மனமுவந்து
மயக்கமற மகிழ்ந்து தோற்ற
கன்னியுமை கமல மலர்க் கழலணிந்த
கழலிணைகள் கருதி வாழ்வாம்"
என சிவராத்திரி அம்மானையின் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் நம் முன் விரிந்து கிடக்கிறது.
கிறிஸ்தவ போதகராய் இருந்த தேசிகரின் தமிழ் ஆற்றலும் சைவ சமய அறிவும் சமரச நோக்கும் மட்டக்களப்பு சமூகத்தாரிடையே நிலவிய மதங் கடந்து நிலவிய ஒரு பண்பாட்டு பகைப் புலத்தை தெளிவு படுத்தி நீள்வதைக் காணலாம்.
"ஞான குரு பதிகம்"
எனும் நூல் யேசு கிறிஸ்துவை ஞான குருவாக தமிழ் இலக்கியர்களுக்கு அறிமுகப் படுத்துகிறார் தேசிகர்.இது செவிலக்கிய வகையில் பன்னிரு சீர் விருத்தங்களாலமைந்த ஒரு விருத்தப்பா நூலாகும்.
"எளியர்க்கு எளியனே
ஏழை பங்காளனே
யேசு பர ஞான குருவே"
என ஈற்றடி கொண்டு முடியும் பதிகமாய் அமைந்த இப் பாடல்கள் யேசுநாதரின் கருணையையும் அன்பையும் எடுத்தும் சொல்லும் ஒரு காவியமாய் கனிந்து நிற்கிறது.
தேசிகரின் கிறிஸ்தவ கீர்த்தனைகள் மெதடிஸ்த மிசனாரின் பாடல் புத்தகங்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளமையும் இன்றும் மெதடிஸ்த தேவாலயங்களில் உயிர்ப்புடன் பாடப்படும் பாடல்களாய் வாழ் நிலையில் உள்ளன.
வீரமுனை கண்ணகை மீது பாடிய "வீரமுனை கண்ணகை அம்மன் காவியம்"
விருத்தப்பாவில் அமைந்த மற்றுமொரு நூலாகும்.
மேலே குறிப்பிட்ட நூல்களை விட தனிப்பாடல்களாய் தேசிகர் யாத்த
திருப்புகழ்
விருத்தம்
கொச்சகம்
கலித்துறைப் பாடல்கள் குறிப்பிடத் தக்கன.
"நிறைந்த தன்னடக்கமும் அமைதி தவழும் இன்முகம் கொண்டு எவருடனும் இனிமை ஒழுகப் பேசுபவரான சோமசுந்தரத் தேசிகரது தமிழ் புலமை அக்காலத்து அறிஞர்களால் விதந்துரைக்கப் பட்டமை இங்கு மனங் கொள்ளத் தக்கது."
தேசிகரது புதல்வர் அமரர் கல்வியாளர் D.G.சோமசுந்தரம் என்பது குறிப்பிடத் தக்கது இவரும் தந்தையின் வழியில் தமிழ்ப் புலமை நிறைந்த சான்றோன் என்பது தேசிகரின் வழி வழி வந்த பெருமையாய் தொடர்கின்றது.
என் மனைவியின் பாட்டனார்(அப்பப்பா)
(இந்தக் கட்டுரை மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலில் பண்டிதர் வி.சி.கந்தையா அவர்களது கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது)

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி