வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

அரங்காடு காதை சிலப்பதிகாரத்து மாதவியைக் கண்டேன்

அரங்காடு காதை
சிலப்பதிகாரத்து மாதவியைக் கண்டேன்

அரங்காடு காதையால் அதிர்ந்த நோர்வே
தமிழ் நடன மரபை கண்டடைதல்
நேற்றய மாலை 05.01.2020 ஒஸ்லோ நகரில் கலா சாதனா கவிதாவின் மாணவி நிரோஜியின் அரங்காடு காதை அரங்கேற்ற நிகழ்வு தமிழ் நடன வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாய் முகிழ்த்த தருணம் அந்த நிகழ்வின் முதன்மை விருந்தினராய் நான் கலந்து கொண்டமை பெரு மகிழ்வின் சாரலாய் என்னுள் பொழிந்து நின்றது.
பரத நாட்டிய மரபில் எப்போதுமே புதியதை ஆடல் நிகழ்வுகளில் தேடிக் கண்டடையும் கவிதா இம்முறை சிலப்பதிகாரத்துள் மூழ்கி முத்தெடுத்து நமக்கு தந்துள்ளார்.
நிரோஜியின் அரன்கேற்றத்துக்கு அரங்காடு காதை என பெயர் சூட்டி தமிழ் ஆடல் மரபின் புதிய பாய்ச்சலாய் இந்த அரங்காடு காதை சிலப்பதிகாரத்து தலைக்கோல் நாயகி ஆடல் தலைமகள் மாதவியை கண்முன் கொண்டு வந்தது போல் இருந்தது நிரோஜியில் நான் மாதவியை பார்த்ததுபோல் அமைந்தது அரங்காடு காதை.
கடலாடு காதயில் மாதவி ஆடிய பதினோராடலும் அரங்கில் தமிழ் ஆடல் மரபின் செழுமையை சுட்டி நின்றமை குறிப்பிடத் தக்கது .சமஸ்கிருத மயமாக்கப் பட்ட பரத நாட்டிய மரபில் ஒரு மரபின் மீறலாய் அரங்காடு காதை தமிழ் ஆடல் மரபை நமக்கு உணர்த்திச் சென்றுள்ளது.
நாம் வெறும் எழுத்துருவில் கண்ட கேட்ட தமிழ் ஆடல் மரபு சிலப்பதிகாரம் சொல்லும் வேத்தியல் பொதுவியல் பல் வகைக் கூத்து பதினோராடல் அரங்கேற்று காதையில் வரும் ஆடல் அமைதி இசையமைதி என்பவற்றை மீளுருவாக்கம் செய்கின்ற ஒரு முதல் முதற்சியாக இந்த அரங்காடு காதை நிகழ்வை நான் பார்க்கிறேன்.
தமிழ் நாட்டில் யாரும் செய்தத் துணியாத முயற்சியை கட்டுடைத்து மரபுக்குள்ளேயே மரபைத் தேடும் ஆடல் நிகழ்வாய் அரங்காடு காதை நமக்கு பல சேதிகளை விடுச் சென்றுள்ளது.இன்னும் இன்னுமாய் நாம் தொலைத்த ஆடல் மரபுகளை கண்டடைய இது ஒரு முன் முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.
கொடு கொட்டி
பாண்டரங்கம்
அல்லியம்
மல்லாடல்
துடிக்கூத்து
குடைக் கூத்து
குடக் கூத்து
பேடிக் கூத்து
மரக்காலாடல்
பாவைக் கூத்து
கடையக் கூத்து
என சிலப்பதிகாரம் வரிசைப் படுத்தும் பதினோராடலும் நம் கண் முன் விரிந்து நின்றன.இந்த ஆடல்களில் எல்லாம் நிரோஜி மாதவியாகவே மாறியிருந்தார் ஆடல் நிகழ்வில் நிரோஜியின் உடல் மொழி ஒவ்வொரு ஆடல்களுக்குமான வேறுபாட்டையும் பாவத்தையும் உணர்த்தி நின்றமை அவரின் தனித் தன்மையை வெளிப்படுத்தி நின்றமை இங்கு விதந்துரைக்க தக்கது.
கவிதா என்கிற ஆடல் மகளின் அதீத திறன் அரங்காடு காதை எனும் இந்த அரங்கேற்றத்தில் புதிய பரிமாணங்களை தொட்டு நின்றது.
பல்கலைக் கழகங்கள் கண்டடைய வேண்டிய விடயங்களை கவிதா முன்னெடுத்துள்ளார்.இது ஒரு புதிய பாய்ச்சலாய் பார்க்கிறேன்

மரபுக்குள் இருந்து மரபை மீறிய அரங்காடு காதை அரங்கேற்ற நிகழ்வு
பரத நாட்டியம் எனும் சொற்றொடர் எப்போது வழக்கில் வந்தது.
19ம் நூற்றாண்டு வரை சதிர் ஆட்டம் ,தாசி ஆட்டம் சின்ன மேளம் என்ற சொற்களே பயன்பாட்டில் இருந்தன அண்மைக் காலம் வரை கிராமங்களில் இப் பெயர்களே வழக்கில் இருந்தமை குறிப்பிடத் தக்கது.
பரத நாட்டியம் எனும் சொல்லாடல் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு உட்பட பயன் பாடு கொண்டதாகவே உள்ளது.ஒரு தொண்ணூறு ஆண்டு வரலாறே இதன் நீட்சி.
தஞ்சாவூர் பொன்னையா பிள்ளை ,சின்னையா பிள்ளை வடிவேலு ஆகியோரும் இவர்களைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரம் பிள்ளை ,கிருஸ்ணையர்,பாலசரஸ்வதி,ருக்மணி அருண்டேல் போன்றவர்கள் சதிராட்டத்துக்கு புது வடிவம் கொடுத்தனர். இந்த ஆட்ட வடிவத்துக்கு கிருஸ்ணையர்தான் 1930ம் ஆண்டில் "பரத நாட்டியம் " என பெயர் கொடுத்தவர்.
பரத நாட்டியம் ஆடல் வழி தமிழ் மரபின் நீட்சியைப் பேச இலக்கண வரண் முறையில் சமஸ்கிருத பரத நாட்டிய சாஸ்திரத்தை அடியொற்றி நிற்கிறது.
தமிழ் நடனமாய் மூவாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட ஒரு நடன மரபு பின்னய காலங்களில் சதிராட்டமாய் தேவசாதி ஆட்டமாய் அறியப் பட்டு வந்த மரபு உயர் குழாத்தினர் கைகளில் சென்று, சமஸ்கிருத மொழியின் ஆளுகையை உள்வாங்கி பரத நாட்டியம் என்பதற்கு புதிய விளக்கங்களும் கொடுக்கப் பட்டமை இங்கு மனம் கொள்ளத் தக்கது.
பரத முனிவரால் உருவாக்கப் பட்டதாலேயே பரத நாட்டியம் என பெயர் வந்ததாகவும் அது.பரதம் என்ற சொல் ப-பாவம்,ர-ராகம்,த.-தாளம் என மூன்றையும் சுட்டி நிற்பதாகவும், பாவமும் உணர்ச்சியும் ராகமும் இசையோடு இணைந்ததே" பரதம்" என பொருள் பட்டதாகவும் விளக்கம் அளிக்கப் படுகிறது.பாரத நாட்டுக்குரிய நடனம் எனவும் பேசப்பட்டது.
அரங்கேற்றம் என்கிற சொல் வழி ஒரு நடன பண்பாட்டை சிலப்பதிகாரம் தமிழ் நடன மரபின் செழுமையை சொல்லி நிற்கிறது. ஆனால் இன்றைய பரத நாடிய அரங்கேற்ற சட்டகத்துக்கும் சிலப்பதிகார அரங்கேற்ற முறைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சிலப்பதிகார அரங்கேற்ற முறமையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு ஆரம்ப முன் முயற்சியே கவிதாவின் தயாரிபில் நிரோஜியின் அரங்கேற்றமாய் அமைந்த அரங்காடு காதை


அரங்காடு காதை – அரங்கேற்ற நிகழ்வு சில கேள்விகளை சிலருக்கு ஏற்பட்டுத்தியுள்ளது. அந்த நிகழ்வை முழுமையாய் பார்த்தவன் என்ற வகையில் பதினோராடல் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு.
கலாசாதனா கலைக்கூட கவிதாவின் மாணவி நிரோஜியின் 'அரங்காடு காதை' தொடர்பாக பலர் எழுப்பும் கேள்விகள் அந்த நிகழ்வுக்கு கிடைத்த வெற்றியாகவே கருத முடியும் அந்த கேள்விகள் பலவற்றுக்கு அங்கு வெளியிடப் பட்ட நூலிலேயே, அதற்கான பதில்கள் உண்டு.
வழமையான அரங்கேற்ற நிகழ்வுகளிலிருந்து.அரங்காடு காதை வேறு பட்டது.
வழமையான அரங்கேற்ற மார்க்கத்தின் முக்கிய பாகங்களை தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது அவ்வளவே.
கடவுள் வாழ்த்து,புஸ்பாஞ்சலி – மலர் வணக்கம்
கொடுகொட்டி – அலாரிப்பு
பாண்டரங்கம் - தாண்டவம்
அல்லியம் - கவித்துவம்
மல்லாடல் - இன்று ஆடப்படும் எந்த வடித்திற்குள்ளும் உள்ளடக்கப்படவில்லை
துடிக்கூத்து – வர்ணத்தின் கூறுகள்
குடைக்கூத்து - இன்று ஆடப்படும் எந்த வடித்திற்குள்ளும் உள்ளடக்கப்படவில்லை
குடக்கூத்து - இன்று ஆடப்படும் எந்த வடித்திற்குள்ளும் உள்ளடக்கப்படவில்லை
பேடி – பதம்
மரக்கால் ஆடல் - கீர்த்தனம்
பாவைக்கூத்து – பதம்
கடையம் - கிராமிய நடனம்
தில்லானா
கூத்து ஆடப்படவில்லையே என்ற கேள்விகள் எழலாம்
பரதநாட்டியம் என்ற பெயர் சமீபகாலத்தில் கொண்டுவரப்பட்டதே. சதிர், சின்னமேளம், தேவதாசி ஆட்டம், கூத்து, நாட்டியம் என்ற பெயர்களாலேயே அழைக்கப் பட்ட வரலாற்றை சங்க இலக்கியம் முதல் தொடர்ந்து வந்த இலக்கியங்கள் சுட்டி நிற்கின்றன .அரங்கேற்றத்துக்கு பூசை செய்யும் நடராஜர் வடிவம் "தில்லையில் கூத்தனே தென் பாண்டி நாட்டானே" என்றே இலக்கியங்கள் பேசுகின்றன ஆடல்வல்லான் கூத்தனே என்று விழித்து நிற்கின்றன.
பதினோர் ஆடலில் நம் ஈழத்து கூத்தையும் சேர்த்திருக்கலாம். ஆனால் இவ்வாடல்கள் எந்த வடிவத்தில் ஆடப்பட்டன என்பதற்குரிய சான்றுகள் இல்லை. இன்றைய நாட்டிய வடிவம் சார்ந்தும் கூத்துகள் சார்ந்தும் பல குறிப்புகளை நாம் காண்கின்றோம். கூத்து வடிவத்திலும் இவை நிகழ்த்தப்படலாம்.
மாதவி நாட்டிய நன்னூல் கற்றவள். வேத்தியலும் பொதுவியலும் அறிந்தவள். வேத்தியல் என்பது வேந்தனைப் புகழ்ந்து ஆடுதல். பொதுவியல் என்பது சமூக வாழ்வியலைப் பிரதிபலித்து ஆடலை நிகழ்த்துவது.
மாதவி ஆடலில் இன்றைய பரத நாட்டியத்தின் மூலக் கூறுகள் நிறைந்து கிடக்கின்றன.
சிலப்பதிகாரப் பாடல்கள் பயன்படுத்தப் படவில்லை என்ற குறை சிலருக்கு இருக்கலாம்.சிலப்பதிகாரம் ஆடல் வகை பற்றி மட்டுமே குறிபிடுகிறது அதற்கான பாடல்கள் அங்கில்லை.ஆனால் கானல் வரி பாடல்களை தனியே ஆடல் வடிவமாக செய்யலாம் அது அவரவர் முனைப்பும் கற்பனையும் சார்ந்தது.
சிலப்பதிகாரத்தில் இருந்து மாதவி ஆடிய பதினோர் வகை ஆடல்கள் தான் நிகழ்த்திக்காட்டப் பட்டது.
சிலப்பதிகாரத்தில் பதினொரு வகை ஆடல்களுக்குமான பாடல்கள் இல்லை. நிரோஜியின் ஆற்றுகைக்கான எல்லாப் பாடல்களும் பதினொரு வகை ஆடலின் கதைக்குறிப்புகளை வைத்து புதிதாகப் புனையப் பட்டிருக்கிறது.
வழமையான அரங்கேற்றப் பாடல்கள் யாரோ ஒருவர் எழுதி இன்னொருவரால் ஆடல் கோர்வை ஆக்கப் பட்டவையே.
நிகழ்வுக்கான பதின் மூன்று பாடல்களும் புதிதாக எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டு, நடனமமைக்கப்பட்டுள்ளமை இங்கு விதந்துரைக்கத் தக்கது.
பதின் மூன்று பாடல்களும் புதியனவாக நிகழ்த்தப்படுவது என்பது ஒரு அசாத்திய முயற்சி.கலை எதுவாக இருந்தாலும் அது புதியன புனைவதாக இருக்க வேண்டும்
இருப்பதை மீள ஆடுவதைவிட புதிதாய் ஆக்குவதற்கு எத்தனையோ மடங்கு நேரமும் அர்ப்பணிப்பும் ஆற்றலும் தேவை. அதனை கலாசாதனா கவிதாவும் நிரோஜியும் அணி சேர்த்த கலைஞர்களும் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
அரங்காடு காதை நிகழ்வு. பெரும் சாதனை.
வழமையான அரங்கேற்ற நிகழ்வுகளில் உடைகள் மாற்றம் ஒரு சிலவற்றுடன் முடிந்து விடும் ஆனால் இங்கு ஆடல் வடிவங்களுக்கு ஏற்ப உடை அமைப்பு பார்த்து பார்த்து செய்யப் பட்ட கரிசனை பளிச்சென புலப் பட்டது.
மாதவி ஆடியதாக ஆய்வுநூல்கள் குறிப்பிடுகின்ற அடிப்படையிலேயே ஆடல் கோர்வைகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. மற்றும் இந்த அரங்கத்தில் ஆடப்பட்டவை வழமையாக ஒரு பெண் ஆடுவது போல மட்டுமாக அமையப்பெறவில்லை.
1. ஒரு பக்கம் ஆணும் மற்றொரு பக்கம் பெண்ணுமாக ஆடவேண்டும்
2. முதிர்ந்த வீரமும் ஆண்மையும் மிக்க ஆடவேண்டும்
3. சிறுவன் போல (கண்ணனும் முருகனும்) ஆடவேண்டும்
4. பேடியாக (ஆண்மை திரிந்து பெண்மைக்கோலத்தில் ஆடவேண்டும்)
5. வீரமிக்க முதிர்ந்த பெண்ணாக ஆடவேண்டும்
6. சிறுபெண்ணாக நளினமாக அழகு மிளிர ஆடவேண்டும்
7. சாதாரண உழைக்கும் பெண்ணாக ஆடவேண்டும்
8. காலில் மரம் கட்டி ஆடத் தெரியவும் வேண்டும்
9. தலையில் குடம் வைத்தும் ஆடத்தெரிய வேண்டும்.
10. இது போக மலர்வணக்கமும், வர்ணமும், தில்லானாவும் ஆடப்பட்டது
11. சொற்கட்டுகளும் தாளமும் வழமையான உருப்படிகளைவிட கடினமாகப் போடப்பட்டிருந்தது.
பல வித உணர்வின் பரிமாணங்களை தன் உடல் மொழியால் மெய்ப்பாடுகளின் வழி ஆடல் நங்கை வெளிப் படுத்த வேண்டும்.அதனை கச்சிதமாக நிரோஜி செய்து காட்டியமை இங்கு மனங் கொள்ளத் தக்கது
ஒவ்வொரு ஒப்பனையும் சில நிமிடங்களுல் மாற்றி தயார் படுத்தப் பட்டிருந்தன எந்த இடத்திலும் தொய்வின் சாயல் தெரியவில்லை.
Image may contain: 1 person, smiling, indoor
இவைகளைவிட முக்கியமாக இதைப்பற்றிய கேள்விகளுக்குப் சிலப்பதிகாரமும் அதுதொடர்பான நூல்களும் நமக்கு துணையாக உள்ளன.அவை வழியே நம் ஆடல் வடிவங்களின் மூலத்தை அறிந்து பயணிப்பது பொருத்தமானதே
அரங்கேற்றப்பெண் கற்றுக்கொண்டிருப்பவள்.நோர்வேயில் பிறந்து வளர்ந்தவள் தமிழ் ஆடல் மீது அதீத காதல் கொண்டவள். வர்ணத்தில் ஒரு தடுமாற்றம் இருந்ததுதான் ஆனாலும் அதை சுதாகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது ஓர் அழகியல் அனுபவமே.பல அரங்குகளில் துறை போனவர்களே சில சறுக்கல்களை எதிர் கொண்டுள்ளனர்.
இது ஒரு பரீட்சார்த்த முயற்சி என்பதால் அதற்குரிய சில சவால்களும் இருக்கவே செய்தன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.(இன்னும் வரும்)




No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி