வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

கட்டைபறிச்சான் பாலம்(இறால் பாலம்)

கட்டைபறிச்சான் பாலம்(இறால் பாலம்)

கட்டைபறிச்சான் சேனையூரைச் சுற்றி ஓடும் ஆறு இப்பிரதேசத்தை வெளித் தொடர்புக்கான எல்லையாக விளங்குக்கிறது.இதில் கட்டை பறிச்சான் பாலம் பொருளாதார கேந்திர முக்கியத்துவம் உடையது.
ஊர் ஆற்றோடு இணைந்திருக்க தொழிலுக்கான விளை நிலங்கள் ஆற்றுக்கு வெளியே பரந்திருக்கிறது அந்த விளை நிலத்துக்கான பெரு வழியாக கட்டை பறிச்சான் பாலமே அமைந்துள்ளது.
பிரித்தானியர் காலத்தில் மரப்பாலமாக அமைக்கப் பட்டது.பின்னர் கல் பாலமாக மாற்றப்பட போக்குவரத்தும் பொருளாதார மேம்பாடும் இப்பாலத்தினூடு மேம் பட்டது என்றே சொல்லலலாம்.
செட்டியாவெளி முதல் பிரம்பு வெளி வரை நீண்டிருக்கும் வயல் வெளிகள் சேனையூர் கட்டைபறிச்சான் மக்களுக்கு சொந்தமாக இன்றுவரை தொடரும் வயல் சார்ந்த பொறுளாதாரமும் .சிறு தோட்டப் பயிர்ச் செய்கையும்.சேனைப் பயிற் செய்கையும் இப்பாதையின் வழியே வளம் பெற்றமை வரலாறு.
வெருகல் வரை தொடர்ந்த வண்டில் பயணங்கள் கட்டைபறிச்சான் பாலத்தின் வழியே பயன் பாடுடுடையவை எங்கள் கிராமங்களின் பொருளாதார திறவு கோல் கட்டைபறிச்சான் பாலத்திலேயே புதைந்து கிடந்தது.
ஆரம்பத்தில் தம் சொந்த கறித் தேவைக்காக மீனையும் இறாலையும் பிடித்து இப் பாலத்தில் பிடித்த நிலமை பின்னர் முக்கிய வியாபார வாழ்வாதாரமாய் இறால் வீசுதல் தொழில் கட்டை பறிச்சான் பாலத்தை அடிப்படையாக கொண்டு ஆறு முழுவதும் நீண்டது.பின்னாளில் இறால் பாலம் என்ற காரணப் பெயரைப் பெற்றது.
இப் பாலம் பற்றி கலாபூசணம் திரு.கா.வீரசிங்கம் பாடிய பாடல் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருந்தும்
''கட்டைபறிச்சான் பாலத்திலே
கொக்குப் போல குந்தியிருந்து
துள்ளி வரும் இறாலையெல்லாம்
அள்ளி வைத்து ஆக்கிடுவேன்''
மாலை ஆனதும் தீர்த்த திருவிழா போல வெளிச்சம் படர சூழ் விளக்குகள் அணி வகுக்கும் விடிய விடிய தொடரும் போராட்டம் மிகுந்த தொழில் முனைப்பு.இறால் பிடிப்பவர்கள் தங்களுக்கான இடத்தை தேர்வு செய்தலும் அது இறால் கிடங்கு என பேசப் படுவதும் வழக்கம்.
மாரி காலத்தில் பாலத்துக்கு மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அழகு அந்த அழகில் மயங்கிய காலங்கள்.
சனி ஞாயிற்று கிழமைகளில் பாலத்திலிருந்து பாய்ந்து பாலத்துக்கு கீழாக போட்டிருக்கும் குழல் வழியாக வெளியேறி வித்தை காட்டுவதும் சுழியோடுவதும் எங்கள் விளையாட்டு.
பாலக் கற்களிடையே இரவு நேரத்தில் நண்டு குத்தப் போவதும் அவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து துடிக்க துடிக்க சமைப்பதும் சாப்பிடுவதும் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்.
இரவு நேரத்தில் நிலாக்காலத்தில் நன்பர்களுடன் பேசி மகிழ்வதும் என்றும் இனிய நினைவுகளே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி