வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

என்னை ஆராதித்த மட்டக்களப்புத் தமிழகம்

என்னை ஆராதித்த மட்டக்களப்புத் தமிழகம்

மட்டக்களப்பு எனும் பெரு நிலம் வெருகல் தொடங்கி பாணமை வரை நீண்டு தமிழ் கூறும் நல்லுலகம்.
பன்னெடுங்கால பழந்தமிழ் நிலம்.
மட்டக்களப்பு தமிழகம் தனித்துவமான பண்பாடுகளால் ஏனைய தமிழர் பிரதேசங்களிலிருந்து வேறு படுகிறது.பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவதைப் போல மட்டக்களப்பு பண்பாட்டு மானிடவியலாளர்களின் சுரங்கம்.பண்டிதர்.வி.சி.கந்தையா அவர்களின் மட்டக்களப்பு தமிழகம் எனும் நூல் அதன் தனித்தன்மையயை வெளிப் படுத்தி நிற்கிறது.அதேபோல பேரா.மெளனகுருவின் மட்டக்களப்பின் மரபு வழி நாடகங்கள் எனும் நூல் கூத்தும் அதனோடிணைந்த கலைகளையும் நம் முன் கொண்டு வருகிறது.மட்டக்களப்பின் வரலாற்றைப் பேசும் பலர் வித்துவான் கமலநாதன்,விஜயரத்னம் எட்வின்,வெல்லவூர் கோபால்,செல்வி.தங்கேஸ்வரி,
சுவாமி விபுலானந்தர் பண்டிதர் பூபாலபிள்ளை,சோமசுந்தர தேசிகர்,புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை,பண்டிதர் வி.சி.கந்தையா என் நீண்டு செல்லும் அறிஞர் பரம்பரையும் அவர் தம் முதுசங்களும்.
மட்டக்களப்பு எனக்கொரு கனவு தேசம்1961ம் ஆண்டு எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது அம்மாவுடன் முதல் மட்டக்களப்பு விஜயம் அப்புச்சி அப்போது மட்டக்களப்பு சிறையில் ஒரு வழக்கு தொடர்பாய் விழக்க மறியலில் இருந்தார்.இன்னமும் மாறாத நினைவு அது .
தொடர்ந்து வெருகல் திருவிழா போகும் போதெல்லாம் வெருகல் ஆற்றைக் கடந்து மட்டக்களப்பின் எல்லையயை தொட்டு நாவல் பழம் ஆய்ந்து தாமரைக்காய் பறித்து அங்கு பூத்திருக்கும் அல்லிப் பூவில் மயங்கிய நாட்கள்.வெருகலுக்கு வரும் மட்டக்களப்பின் பூந்தி கடைகளின் வாசமும் ருசியும் மனதை மயக்கும்.
அப்புச்சி அடிக்கடி சொல்வார் கல்லாத்தில் சொந்த காரர்கள் இருப்பதாக.எங்கள் ஊரில் சின்ன மட்டக்களப்பு என்ற இடமே உள்ளது அந்தளவுக்கு மட்டக்களப்புக்கும் எங்களுக்கும் நெருங்கிய தொடர்பு.ஆனாலும் எனக்கு மட்டக்களப்பு ஒரு கனவாகவே இருந்தது.
1971ம் ஆண்டு எங்கள் சேனையூர் மகாவித்தியாலய முதல் சுற்றுலா
அதிபர் கணேஸ் மாமா ஏற்பாடு செய்தார் என்னிடம் பண வசதியில்லை ஆனாலும் எனக்குரிய சுற்றுலா பணத்தை கணேஸ் மாமாவே கட்டினார்.அற்புதமான பயணம் அது.இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்தோம்.மட்டக்களப்பில் வாழைச்சேனை கடதாசித்தொழிற்சாலை ,மட்டக்களப்பு நகரம் எங்கள் கண்களில். சித்தாண்டி கந்தலிங்கம் அய்யா வீட்டில் சாப்பாடு புட்டும் தயிரும் மறக்க முடியா மண் மறவா சாப்பாடு.என்னுள் மட்டக்களப்பு பற்றிய கனவை மேலும் மெருகூட்டிய பயணம் அது
1977யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மட்டக்களப்பிலிருந்து பலர் வந்து சேர்கின்றனர்.எல்லோரும் நண்பர்களாகின்றனர்.1978 புயல் பல்கலைக்கழகமிருந்து முதல் குழுவாக திருகோணமலையிருந்து
கடல் பயணம் மட்டக்களப்பு கல்லடியில் நிவாரணப் பொருட்களுடன் இறங்க ஏனையவர்கள் தரை மார்க்கமாக மட்டக்களப்பு வருகின்றனர் புயல் பாதித்த வாகரையிருந்து அக்கரைப்பற்று வரை எங்கள் பயணம் நிவாரணப் பணிகளில் நாங்கள்.
கனவு தேசமான மட்டக்களப்பு சிதைந்து சின்னாபின்னமான காட்சிகள்.
பின்னர் அடிக்கடி நண்பர்களுடன் மட்டக்களப்பு நோக்கிய பயணங்கள் எங்கள் சக மாணவி சந்திரமணியின் பாட்டி மரண வீடு காரைதீவு சென்றமையும்,காரைதீவு கண்ணகி ,விபுலானந்தர் இல்ல தரிசனம் என என் கனவின் மீதி நிஜமாகிய நாட்கள்.
பின்னய விடுமுறை நாளில் நண்பர்களுடன் சம்மாந்துறையில் மன்சூர் ஏ காதர் வீடும் அவர்கள் ஆற்றில் குளித்ததும் அடுத்த நாள் கல்முனைக்குடியில் எச்.எம் பாறுக் வீட்டுச்சாப்பாடும் எங்கள் ஆசான் பேராசிரியர் நுஹ்மான் வீட்டுக்கு சென்று வந்தமையும் சந்தோசப் பொழுதுகள்.
வாழைச்சேனை ராஜ்குமார் வாகரை கபிரியல் மாஸ்ரர் மகள் மட்டக்களப்பு ராஜலட்சுமி,ரூபி,பாண்டிருப்பு தவமணி,ஜெயந்தி,குருமண்வெளி பாக்கியராஜாஇன்னும் பல நண்பர்கள். என நண்பர் நண்பிகளின் சந்திப்பு.
ஈழப் புரட்சி அமைப்பாய் இயங்கிய போது காத்தான்குடி கபூர்,மட்டக்களப்பு பொன்னம்பலம் கஜன்,கிருபா என எத்தனை தோழர்கள்.
திருமணம் மட்டக்களப்புக்கே நான் மருமகனாதல் குருமண்வெளியூர் சோமசுந்தர தேசிகர் பேத்தி என் மனைவியாக வந்தமை மட்டக்களபினூடான என் பந்தத்தை உறவு ரீதியாக உறுதிப் படுத்தியது.
1991ல் நான் திருகோணமலை மேற்கு தமிழ் வித்தியாலைய பிரதி அதிபராக இருந்தேன் அப்போது மாகாண மட்ட தமிழ்தின போட்டிக்காக வந்த போது 1978புயலின் அழிவிலிருந்து மீண்டு மீண்டும் தன்னை தகவமைத்துக் கொண்ட மட்டக்ககப்பு அழிந்து கிடந்த அவலம் 1990ல் யுத்தத்தின் கோரம் திண்று துப்பியிருந்தது என் மனம் துணுக்குற்று அழுத நாட்கள் அவை.தமிழ் தின போட்டியில் இசைநாடகத்துறையில் முதல் பரிசைப் பெற்றோம்.பின்னர் அந்த நாடகம் அகில இலங்கை மட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத் தக்கது.அந்த நாடகத்தை நானே எழுதி இயக்கியிருந்தேன்.
கூத்தும் இசையும் கும்மியும் வசந்தனும் பறைமேளமும் சொர்னாளியும் சடங்கும் கண்ணகை அம்மனும் நம்மை களி கொள்ள வைக்கும் தருணங்கள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி