வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 12 March 2018

சடையன் எனும் மா கலைஞன்

சடையன் எனும் மா கலைஞன்


ஈழத் தமிழரின் கலை மரபில் பறை மிக முக்கியமான ஒரு வாத்தியமாய் பன்னெடுங்கால பயன் பாட்டில் தொடர்ந்து பண்பாட்டியல் இருப்பாய் பேணப்பட்டு இன்று வரை அதன் நிகழ்த்துகை தொடர்கிறது.பறையோடு இணைந்து வரும் சொர்ணாளி இசை கேட்போரை சொக்க வைக்கும் .
சொர்ணாளி வட இந்திய செனாயின் நாதத்தை ஒத்தது ஈழத் தமிழர்களின் இசை மரபின் தனித்துவ குழல் கருவி.
சொர்ணாளி வாசிப்பதற்கு அதை முறையாய் பயின்றிருக்க வேண்டும். மூச்சுப் பயிற்சியுடன் இசையை இசைக்கும் திறன் சேர்ந்து இனிய நாதமாய் அது நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்.
என் இள வயதில் நான் கண்ட சொர்ணாளி கலைஞனே சடையன்.கம்பீரமான தோற்றம் வேட்டி கட்டி சால்வை தொழில் அசைய வெள்ளை மேனியும் அள்ளி முடித்த வெண்சடையும் மிக உச்ச வாசிப்பில் குடும்பி அவிழ வெள்ளைச் சடை காற்றில் அசைய அந்த கலைஞனிடம் வெளிப்படும் நாதம் இன்னமும் என் காதுகளில் ...
சொர்ணாளி சடையனிடம் சரணடைந்து கிடக்கும் ஊரெங்கும் அந்த இசை கும்ப விழா நடக்கும் பத்து நாட்களும் ஊரெங்கும் பரவிக் கிடக்கும் .கும்ப ஊர்வலம் நடை பெறும் இரண்டு நாளும் சொர்ணாளி இசைக்கு ஆடும் உருவாட்டம் அந்த ஆட்டத்தின் அழகை மேலும் மெருகேற்றும்.விழா முடிந்து பல நாட்களுக்கு சொர்ணாளி எல்லோர் செவிகளிலும் குடி கொள்ளும்
சடையன் போன்ற பல கலைஞர்கள் வாழ்ந்து மடிந்து போயினர்.காரக்குறிச்சி அருணாசலத்தையும் பஞ்ச மூர்த்தி கான மூர்த்தி போன்றோரை கொண்டாடும் சமூகம் சடையன் போன்ற அற்புத கலைஞர்களை மறந்து விடுகிறது.
சேனையூரில் என் பாட்டானார் பூசாரி வைத்தியர் கலைஞர் விஜயசிங்கம் காளியப்பு பூசாரித் தத்துவத்துக்கான உதாரண புருசர் அவர்.
அவர் காலத்திலும் பின்னர் அவரது மூத்த மகன் காளியப்பு விஜய சிங்கம் காலத்திலும் சேனையூரில் நடை பெறும் கும்ப விழா,வீரபத்திரன் வேள்வி,சம்புக்களி பத்தினி அம்மன் வேள்வி ஆகியவற்றில் சடையனின் சொரணாளி் சுந்தர இசை எல்லோரையும் மயக்கும் மந்திரமாய் ஒலிக்கும்.
சொர்ணாளியிலேயே மந்திரம் செய்யும் ஆற்றல் பெற்றவர் சடையன்.சடையனோடு இணைந்து மேளமிசைக்கும் திரு.மாணிக்கம் அவர்களையும் மறந்து விட முடியாது.அத்துடன் இவர்களோடு கொட்டு மேளம் இசைக்கும் கலைஞர் அவர் பெயர் நினைவிலில்லை.
சடையன் ஒரு கலைஞன் மாத்திரமல்ல அவர் ஒரு சித்த வைத்தியரும் கூட பல அபூர்வமான நோய்களுக்கு மருத்துவம் செய்யக் கூடியவர்.அத்தோடு மந்திரம் கை வரப் பெற்றவரும் கூட.
நான் மட்டக்களப்பு சென்ற பின் எத்தனையோ சொர்ணாளி கலைஞர்களின் இசையயை ரசித்திருகிறேன் ஆனால் சடையனின் இசை தந்த ஆனந்தம் உன்னதங்கள் நிறைந்தது.
அவரிடம் யானைத் தந்தத்திலாலான சொர்ணாளி இருந்தது அது அவர் இசைக்கு இன்னும் மெருகு சேர்த்தது.
அந்த மா கலைஞனை கொண்டாடுவோம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி