வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 18 March 2018

இளக்கந்த சாமியார்

இளக்கந்த சாமியார்


இளக் கந்த குளம் நிறைந்து போய் கிடந்தது வான் கதவுகள் திறந்து விடப் படு நீர் பெரு நீர் வீழ்ச்சியயைப் போல பொங்கி பிரவாகித்து ஓடிக் கொண்டிருந்தது இம்முறை மழை மாரி மழை கொட்டி தீர்த்து வெள்ளக்காடாய் விரிந்து கிடந்தது பூமி பாயும் நீரில் முக்கி குழித்து மூழ்கி எழுந்தார் இளக்கந்த சாமியார்.
சாமியார்தான் இளக்கந்த குளத்துக்கு பொறுப்பு அவர் ஒரு குளக்கட்டு எஞ்சினியர் எஞ்சினியர் படிப்பு படித்தவர் அல்ல நீர் வள அதிகாரிகள் பகிடிக்கு சொல்லும் வார்த்த பகிடிக்கு சொன்னாலும் குளம் பற்றிய அனுபவ அறிவு அபரிமிதமானது வான் கதவுகள திறப்பது வயல்களுக்கு நீர்ப் பாச்ச மதகு திறந்து கட்டுப் படுத்துவது இதுதான். அவர் வேல
எப்போதும் நெற்றியில் பட்டையாய் திரு நீறும் வட்டமாய் சந்தணப் பொட்டும் நடுவில் குங்குமமுமாய் நீண்ட நரைத்த தாடி இழுத்து கட்டிய குடுமி காக்கிச் சட்டை வேட்டி கமக்கட்டு இடுக்கில் பெரிய குடை இந்த அடையாளங்களுடன் சேனையூரில் வலம் வருவார் குளத்தை பராமரிப்பது அவர் வேலை மாரி வெள்ளாம வெட்டிய பின் ஒருக்கா அவர் ஊரான யாழ்ப்பாணம் போய் வருவார் அந்த நாட்களில் அரசு பெரிய குளங்களை பராமரிக்க பராமரிப்பாளர்களை நியமித்திருந்தது .சாமியார் குழந்தைகளுடன் குதுகலமாக பொழுது போக்குவார் ஆசையிர கடையில பல்லி முட்டாய் வாங்கி பிள்ளையார் கோயில் புளிய மரத்துக்கு கீழ இருந்து மிட்டாய் கொடுத்து பிள்ளைகளை சந்தோசப் படுத்துவார் எப்போதும் அவர் பின்னால் குழந்தைகள் குழுமி இருப்பர்.
ஒரு பழைய சைகில் அது இளக்கந்த ரோட்டில் ஓடி ஓடி எப்போதும் சேறும் புழுதியுமாய் இருக்கும்.ஊரில் எல்லோரும் சாமியார் என்றே அழைப்பர் அடிக்கடி காளியப்பு பரியார் வீட்டுக்கு வந்து பரியாரிடம் பழைய கதைகள் கதைத்துக் கொண்டிருப்பது வாடிக்கை.
குளத்துக்கு பக்கத்திலையே ஒரு வாடி கட்டி இருந்தார் இரவில் அங்குதான் தங்குவது வழக்கம் இளக்கந்த மட்டப்புக்களி பன்வெளி கரச்ச,நல்லூர் என எல்லா இடமும் அவர் சையிக்கில் தடம் படாத இடம் இல்லை எனலாம்
குளித்து முடித்து கரையேறினார் சாமியார் அவர் கரையேறவும் விஸ்வலிங்க பரியாரியாரும்,முத்துகுமாரரும்,இராமலிங்கத்தாரும் வண்டில்ல இருந்து இறங்கவும் சரியாய் இருந்தது .
"பூசாரியார் நீங்க சொன்னபடி பச்ச பாக்கு பச்ச வெத்தில பச்ச பழம் எல்லாம் மூதூருக்கு போய் வாங்கி வந்திற்றன் எல்லாம் சரியா இருக்கு பத்தினித் தாயாருக்கு நேத்திக்கடன் வச்சது அவ அரூள்ள மழ கொட்டோ கொட்டென்று கொட்டி இப்ப பாருங்க நிறைஞ்சு கிடக்குது குளக்கட்டு பத்தினி நம்மள கைவிட மாட்டா "
என்று சாமியார் கொட்டி தள்ளி விட
"நானும் என் பங்க்குக்கு எல்லாம் கொண்டு வந்திருக்கன் முத்துக்குமார் குள வெட்டிப் பந்தல் போடு குளக்கட்டு பத்தினியம்மா குடியிருக்கிற வன்னி மரத்துக்கு கீழ தட்டையா கிடக்கிற பாறாங் கல்லில அம்மாளாச்சிக்கு வேண்டியதெல்லாம் வையுங்க " என்று விஸ்வலிங்கத்தார் சாமியார உசார் படுத்த குளக்கட்டு பத்தினிக்கு அன்றைய நாள் கொண்டாட்டமாய் அமைந்தது.
விஸ்வலிங்கப் பரியாரியார்ர வயல் குடல தள்ளி கிடந்தது சாமியாரும் பரியாரியாரும் கதைச்சு கதைச்சு காவல் மாலுக்கு வந்த போது பக்கத்து வயல் மெத்த வீட்டு நற்சிங்கத்தார் எருமப் பால் புக்கையோட காத்திருந்தார்.
எருமப்பால் புக்க எப்படி காச்சுவது சேனையூராக்களுக்கு ஒரு தனித்துவமான முற இருக்கு காக்கொத்து அரிசிக்கு ஒரு கொத்து பால் விடணும் .எப்பவும் சாமியாருக்கு எருமப் பால் புக்க என்றா உசிர் ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் இப்படி கிடைக்காது.
இளக்கந்த குளத்துக்கு மட்டுமில்ல இளக்கந்த வயல் வெளிக்கும் அவர்தான் காவல் காரன் .வெள்ளாம வெட்டு தொடங்கினா சாமியாருக்கு கொண்டாட்டம் ஒவ்வொரு வயல் காரரும் சாமியாருக்கு ஒரு கட்டு கொடுப்பாங்க எப்படியும் ஒரு போகத்தில அவருக்கு பத்து இருபது மூடைக்கு மேல தேறும் .வெள்ளாம வெட்டு முடிய ஒருக்கா யாழ்ப்பாணம் போய் வருவார்.
உண்மையில் சாமியார்தான் கலியாணம் முடிக்கல்ல ஒரு அக்கா யாழ்ப்பாணத்தில இருப்பதாக சொல்லுவார் .ஊருக்கு போற சாமியார் இரண்டு நாளிலேயே திரும்பிருவார்.
காளியப்பு பரியாரியார் வீடு ஆச கட அடுத்ததா இவர் அடிக்கடி போற இடம் மெத்த வீட்டு நற்சிங்கத்தார் வீடு சாமியார் ஒரு பாட்டுப் பிரியர் நற்சிங்கத்தாரிடம் ஒரு பெரிய சர்பனாப் பெட்டி இருந்தது காலால மிதித்து வாசிக்கும் பெரிய பெட்டி அந்த நாளைய தியாகராஜ பகவதர்பாடல்கள் என்றால் உயிர் நற்சிங்கத்தாருக்கு கொஞ்சம் சங்கீதம் தெரியும் கிட்டப்பா பாடல்களை பாடி சாமியாரை மகிழ்விபார் நற்சிங்கத்தார் சர்ப்பணாப் பெட்டி வாசிப்பதே ஒரு தனி அழகு வெறும் மேலுடன் தோழில் போட்ட வெள்ளை சால்வையும் வேட்டியும் அவருக்கு தனி அழகைக் கொடுக்க ரசித்து ரசித்து இசையில் மூழ்கிப் போவார் பல வேளைகளில் பாகவதர் மணியம் வந்தால் அது ஒரு இசைக் கச்சேரியாய் மாறும் உனக்கும் வேல தருவன் உனக்கும் வேல தருவன் என நகைச்சுவை பண்ணும் மணியத்தார் வாயை திறந்தால் சாமியார் வாய் மூடாமல் பார்த்து வியந்து நிற்பார் .
பகல் பொழுது இப்படி கழிய மத்தியானம் எங்கையாவது சாப்பாடு கிடைக்கும் சேனையூரில் சாப்பாட்டு நேரத்துக்கு எங்கு போனாலும் சாப்பாடு கிடைக்கும் சாமியாருக்கு மாத்திரமல்ல எல்லோருக்கும் அப்படித்தான் சேனையூரின் விருந்தோம்பல் அப்படி.சாமியாருக்கு பிடித்த இன்னொரு விசயம் தண்ணி சேனையூர் தண்ணிபோல தான் எங்கும் குடித்ததில்ல என்பார் மாலையில் இளக்கந்த போகும் போது ஒரு குடம் சைக்கில பக்குவமா கட்டி கொண்டு போவார்.
பகல் முழுசதும் ஊருக்குள்ள சுத்தும் அவர் மூதூருக்குப் போய் அலுவலகத்தில தன்ர அலுவலக வேலையும் பார்த்து குஞ்சன்ர கடையில வடையும் வணிசும் வேண்டி வருவார்.சில நாட்களில் கூனித்திவு போய் வீசியோவை பத்து வாறதுக்கும் மறக்கிறதில்ல அப்படியே காரியப்பரிட்ட பத்திரகாளி பற்றி பக்தி பூரவமா சில கதைகள் சொல்லி வருவதும் வழக்கம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி